சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர்ப் பாசனக் கருவி: ஆட்சியர் தகவல்

ராமநாதபுரம் மாவட்டத்தில், சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர்ப் பாசன கருவிகள் வழங்கப்படுவதாக ஆட்சியர் எஸ். நடராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழக விவசாய நலன் காக்கும் விதமாக சிறு,குறு விவசாயிகளுக்கு சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர்ப் பாசன அமைப்புகள் நிறுவிட 100 சதவிகித மானியத்தில் ஒரு ஹெக்டேருக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் மூலம் குறைந்த நீரில் அதிக பரப்பில் பயிர் சாகுபடி செய்ய உதவும் திட்டமான நுண்ணீர் பாசனத் திட்டத்தின் மூலம் 40 முதல் 50 சதவீதம் நீர் சேமிக்கப்படுகிறது.
 
ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த நிதியாண்டில் இத்திட்டத்தின் கீழ் 162.21 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.112 லட்சம் மானியத்தில் செயல்படுத்தப்படவுள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தென்னை, மிளகாய், பருத்தி, காய்கறி மற்றும் மலர்ப்யிர்கள், நிலக்கடலை போன்ற பயிர்களுக்கு சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர்ப் பாசன அமைப்புகள் நிறுவ இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் குடும்ப அட்டையின் நகல், சாகுபடி அடங்கல், பட்டா, நில வரைபடம், சிறு,குறு விவசாயிகள் இருப்பின் சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட அதற்கான சான்று ஆகிய ஆவணங்களுடன் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அல்லது வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம்.

மேலும், விபரங்களுக்கு வேளாண்மை இணை இயக்குநரின் 94869 44700 அல்லது தோட்டக்கலைத் துறை துணை இயக்குநரின் 89038 51830 ஆகிய செல்லிடப்பேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Newsletter