நெல்லை அறுவடை செய்து மதிப்பிடும் பணி

கரூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கான நிவாரண கணக்கெடுப்பிற்காக பதராக விளைந்தவற்றை அறுவடை செய்து மதிப்பீடு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.  கரூர் மாவட்டம் சித்தலவாய், சங்கரன் மலைப்பட்டி கிராமத்தில் விவசாயி ராமசாமியின் நெற்பயிர் விளைநிலங்களில் அறுவடை செய்து மதிப்பீடு செய்யும் பணிகளை நேரில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் கூறுகையில், கரூர் மாவட்டத்தில் நெற்பயிர் சாகுபடி, உளுந்து, மஞ்சள், துவரை, கரும்பு, கொள்ளு, நிலக்கடலை, ஆமணக்கு என அனைத்து பயிர்களும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மாநில, மத்திய குழுக்கள் ஆய்வு செய்துள்ளன.

மேலும், நெற்பயிர் சேத மதிப்பீட்டுக்காக மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அனைத்து நெற்பயிர்களையும் அறுவடை செய்து மதிப்பீடு செய்யும் பணி நடைபெறுகிறது என்றார்.

வேளாண் துறை இணை இயக்குநர் அல்தாப், துணை இயக்குநர் எஸ். ராஜேந்திரன், உதவி இயக்குநர் ராஜ்குமார், வேளாண் அலுவலர் மணிமேகலை, ஆய்வாளர் பாண்டியன், வட்டாட்சியர் முருகேசன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

Newsletter