வறட்சியிலும் கால்நடைகளுக்கு எளிதில் தீவனம்: கால்நடை பல்கலை.யில் புதிய கருவி கண்டுபிடிப்பு

வறட்சியிலும் கால்நடைகளுக்கு எளிதில் தீவனம் தயாரிப்பதற்கான புதிய கருவி, தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பண்ணையில் கண்டறியப்பட்டுள்ளது.

இதன் மூலம் அதிக மூலதனம் இல்லாமல் குறைந்த செலவில் தீவனத்தைத் தயாரிக்க முடியும்.

ஹைட்ரோபோனிக் கருவி: மழை பொய்த்து தண்ணீர் இல்லாத காரணத்தினால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வறட்சி பாதித்துள்ளது. பல இடங்களில் கால்நடைகளுக்கு தீவனம் வழங்கக்கூட இயலாத நிலையில் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மண் இல்லாமல், குறைந்த அளவிலான தண்ணீரை வைத்து தீவனத்துக்கான விதைகளை வளர்ப்பற்கு ஹைட்ரோபோனிக் என்ற கருவி கண்டறியப்பட்டுள்ளது. தீவனத்துக்கான மக்காச்சோளம், கோதுமை, பார்லி, காராமணி உள்ளிட்டவற்றை அதில் பயிரிடலாம். 1.65 கிலோ மக்காச்சோளத்திலிருந்து 10 கிலோ தீவனம் கிடைக்கும்.

எவ்வாறு செயல்படும்: இந்தக் கருவியில் வரிசையாக 7 -க்கும் மேற்பட்ட தட்டுகள் பொருத்தப்பட்டிருக்கும். தட்டுகளில் வைக்கப்பட்டுள்ள விதையானது மண் இல்லாமல், தண்ணீரை மட்டும் பயன்படுத்தி 24 மணி நேரம் ஊற வைக்கப்படும். அவ்வாறு ஊற வைக்கப்படும் விதைகள் ஈரமான சணல் பைகளில் கட்டி வைக்கப்படும். அவை நீரினால் ஈரப்படுத்தப்படும். 3-ஆவது சணல் பைகளில் இருந்து விதைகள் எடுக்கப்பட்டு தட்டில் கொட்டப்படும். அதன் பின்பு 3 மணி நேரத்துக்கு ஒருமுறை தண்ணீர் தெளிக்கப்படும். இவ்வாறு வளர்க்கப்படும் தீவனமானது 8 நாள்களில் 30 செ.மீ. வரை வளர்ந்துவிடும்.

சிறு, குறு விவசாயிகளுக்கு பயன்: வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டிய இந்தக் கருவியின் விலை ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை உள்ளது. ஆனால் அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒரு சில கால்நடைகளை வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு ஏற்றாற்போல் குறைந்த விலையில் புதிய கருவி கால்நடை பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிப் பண்ணையில் உருவாக்கப்பட்டுள்ளது. ரூ.90 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் செலவில் இந்தக் கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1000 கிலோ தீவனத்தை வெறும் 480 சதுர அடியில் தயாரிக்க முடியும்.

இதுதொடர்பாக தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பண்ணையின் தலைவரும் பேராசிரியருமான டென்சிங் ஞானராஜ் கூறியது:
சாதாரணமாக 70 நாள்களில் அறுவடை செய்யும் தீவனத்தை இந்தக் கருவியின் மூலம் 9 நாள்களிலேயே அறுவடை செய்துவிட முடியும். இதில் விதை, வேர், புல் என மூன்று விதமான தீவனம் இருப்பதால், கால்நடைகள் மிகவும் விரும்பி உண்ணும். அதிக ஊட்டச்சத்துகளும் கிடைக்கும். மேலும் இதில் கல், மண், தூசு, பூச்சி மருந்துகள் போன்றவை இருக்காது. 50 லிட்டர் தண்ணீர் செலவில், ஒரு நாளைக்கு 3 யூனிட் மின்சாரத்தில் இதை செயல்படுத்த முடியும். இந்த செயல்முறைக்கு பயன்படுத்தப்படும் நீரை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தலாம் என்றார் அவர்.

Newsletter