பரமத்தி வேலூர் ஏலச் சந்தையில் வெற்றிலைகளின் விலை உயர்வு

பரமத்தி வேலூர் வெற்றிலை ஏலச் சந்தையில், வெற்றிலைகளின் விலை உயர்வடைந்துள்ளதால், வெற்றிலைப் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளான பாண்டமங்கலம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், குப்புச்சிப்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் வெற்றிலை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வெற்றிலைகள் கர்நாடகம், கேரளம், குஜராத், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில், வெள்ளைக்கொடி வெற்றிலை (இளம்பயிர் மார்) 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.5,500-க்கும், கற்பூரி வெற்றிலை (இளம்பயிர் மார்) சுமை ஒன்று ரூ.2,500-க்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை (முதியம்பயிர் மார்) சுமை ஒன்று ரூ.2 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை (முதியம் மார்) ரூ.1,500-க்கும் ஏலம் போயின.

புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில், வெள்ளைக்கொடி வெற்றிலை (இளம்பயிர் மார்) 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.6 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை (இளம்பயிர் மார்) சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்துக்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை (முதியம்பயிர் மார்) சுமை ஒன்று ரூ.2,500-க்கும், கற்பூரி வெற்றிலை (முதியம்பயிர் மார்) சுமை ஒன்று ரூ.2 ஆயிரத்துக்கும் ஏலம் போயின. சுப நிகழ்ச்சிகள் அதிகளவில் உள்ளதாலும், வெற்றிலையின் வரத்து குறைந்துள்ளதாலும் வெற்றிலையின் விலை உயர்வடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
 

Newsletter