உடுமலையில் தரமற்ற இளம் பட்டுப்புழுக்கள் விற்பனை - பல லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை!

இளம்புழு வளர்ப்பு மையத்தில் இருந்து பட்டுப்புழுக்கள் வாங்கி வந்த நிலையில் தற்பொழுது 90 சதவீதம் புழுக்கள் அழிந்ததால் வெண்பட்டுக் கூடுகளின் தரம் முற்றிலும் சேதம் ஆகி உள்ளது. இதனால் பல இடங்களில் விவசாயிகளுக்கு பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக உடுமலை பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.



திருப்பூர்: பாதிக்கப்பட்ட வெண்பட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என உடுமலை பகுதி வெண் பட்டு விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் மாநில அளவில் வெண்பட்டு கூடு உற்பத்தி பிரதான தொழிலாக உள்ளது. உடுமலை பகுதியில் மட்டும் 3000 ஏக்கர் பரப்பளவில் வெண்பட்டு விவசாயத்தை விவசாயிகள் அதிக அளவு செய்து வருகின்றனர்.

தனியார் இளம் பட்டுப்புழு முட்டை உற்பத்தி மையங்களில் இருந்து முட்டை தொகுதிகளை பெற்று இளம் புழு வளர்ப்புமனைகளில் 5 நாட்கள் வரை வளர்த்து விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றது. பட்டுப்புழு வளர்ப்பு மனைகளில் 21 நாட்களில் முழு வளர்ந்து கூடு கட்டியதும் விற்பனைக்கு தயாராகிறது.



இந்த நிலையில் உடுமலை அடுத்த கண்ணமநாயக்கனூர், உரல்பட்டி, சீன்னவீரன் பட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் அகரம் உட்பட பல்வேறு தனியார் இளம்புழு பட்டு வளர்ப்பு மையத்திலிருந்து பட்டுப்புழுக்கள் வாங்கிய நிலையில் தற்பொழுது தரமற்ற பட்டுப்புழுக்கள் வழங்கிய காரணத்தால் 100 சதவீதத்தில், 90 சதவீதம் பட்டுப்புழுக்கள் அழகி உயிரிழந்த காரணத்தால் வெண்பட்டு விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து வெண்பட்டு கூடு விவசாயிகள் கூறியதாவது, கடுமையான இன்னொரு இன்னல்களுக்கு இடையே வெண்பட்டு விவசாயம் செய்து வருகின்றோம். இளம்புழு வளர்ப்பு மையத்தில் இருந்து பட்டுப்புழுக்கள் வாங்கி வந்த நிலையில் தற்பொழுது 90 சதவீதம் புழுக்கள் அழிந்ததால் வெண்பட்டுக் கூடுகளின் தரம் முற்றிலும் சேதம் ஆகி உள்ளது. இதனால் பல இடங்களில் விவசாயிகளுக்கு பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் விவசாயிகள் பட்டு வளர்ச்சி துறைக்கு காப்பீட்டுத் தொகை செலுத்திய நிலையில் தற்பொழுது காப்பீட்டுத் தொகை கவர் ஆக வில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். எனவே உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் தரமற்ற பட்டுப்புழுக்கள் விற்பனை செய்த காரணத்தால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதால் எனவே சம்பந்தப்பட்ட பட்டு வளர்ச்சி துறை அதிகாரிகள் தனியார் இளம்புழு வளர்ப்பு மையங்களில் முறையாக ஆய்வு நடத்தி நல்ல தரமான முட்டைகள் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் பாதிக்கப்பட்ட வெண்பட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரண வழங்க வேண்டும் என உடுமலை பகுதி வெண் பட்டு விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Newsletter