கோவையில் ஜூலை 14-ல் வேளாண் கண்காட்சி துவக்கம் - உள்நாடு, வெளிநாடு நவீன தொழில் நுட்பங்கள் இடம்பெறும் என தகவல்!

‘அக்ரி இன்டெக்ஸ் 2023’ என்ற வேளாண் கண்காட்சி கோவை கொடிசியா வளாகத்தில் ஜூலை 14 ஆம் தேதி துவங்குகிறது. இந்த வேளாண் கண்காட்சியில் உள்நாடு மற்றும் வெளிநாடு நவீன தொழில் நுட்பங்கள் காட்சிபடுத்தப்பட இருப்பதாக வேளாண் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.



கோவை: ‘அக்ரி இன்டெக்ஸ் 2023’ என்ற வேளாண் கண்காட்சி கோவை கொடிசியா வளாகத்தில் ஜூலை 14 ஆம் தேதி துவங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதன்மையான வேளாண் வணிக கண்காட்சிகளில் ஒன்றான அக்ரி இன்டெக்ஸ் 2023 வேளாண் கண்காட்சி கோவை கொடிசியா வளாகத்தில் ஜூலை 14 ஆம் தேதி துவங்க உள்ளது. 21 வது பதிப்பாக நடைபெறும் இந்த கண்காட்சியை தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் வீட்டு வசதி நகர்புற வளர்ச்சி, மது விலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் முத்துச்சாமி ஆகியோர் துவக்கி வைக்க உள்ளனர்.

இந்நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவையில் நடைபெற்றது. இதில் கண்காட்சியின் தலைவர் தினேஷ் குமார், கொடிசியா தலைவர் திருஞானம், மற்றும் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக துணை வேந்தர் கீதா லட்சுமி ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.

அப்போது அவர்கள் பேசியதாவது,



21வது பதிப்பாக நடைபெறும் விவசாய கண்காட்சி ஜூலை 14ஆம் தேதி துவங்கி 17ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. துல்லிய வேளாண்மை மற்றும் நுண் நீர் பாசனம் மூலம் இந்திய வேளாண்மையில் மாற்றங்களை உருவாக்குதல் என்ற நோக்கத்தில் கண்காட்சி நடைபெற உள்ளது.

இதில், கொரியா, இஸ்ரேல், ஜப்பான், ஸ்வீடன், பிரான்ஸ்,ஆகிய நாடுகளில் இருந்தும், மகாராஷ்டிரம், குஜராத், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், ஆந்திரம், சத்தீஸ்கர் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நவீன தொழில் நுட்பம் சார்ந்த வேளாண் சார்ந்த நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன.

சுமார் 450 க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற உள்ள இந்த கண்காட்சியில், நவீன ட்ரோன் கருவிகள், ஆட்டோமேஷன், சூரிய ஒளி பம்புகள், நுண் நீர்ப்பாசனம், துல்லியப் பண்ணை, பண்ணை இயந்திர மயமாக்கல், குறைந்த நீர் பயன்பாட்டு விவசாய முறைகள், மதிப்பு கூட்டுதல் மற்றும் கால்நடை வளர்ப்பு தானியங்கி முறைகள்,

கூட்டு மதிப்பு பொருள்கள், அறுவடைக்கு பின் தொழில்நுட்பம்,வேளாண் சந்தை, உள்ளிட்ட சிறப்பு தொழில் நுட்பங்களுக்கு கவனம் அளிக்கப்பட உள்ளது.

மேலும், வேளாண் இயந்திரங்கள், உபகரணங்கள், பாசனக் கருவிகள், கால்நடைப் பராமரிப்பு, வேலிகள், எடைக் கருவிகள், பம்புகள், உரம், விதை உள்ளிட்ட பல்வேறு வகையான வேளாண் சார்ந்த பொருட்கள் இடம்பெற உள்ளது.

நாடு முழுவதிலும் இருந்து வேளாண் நிபுணர்கள், உணவுப் பதப்படுத்தும் தொழில்துறையினர், இடுபொருள் , விதை உற்பத்தியாளர்கள், முதலீட்டாளர்கள், விநியோகஸ்தர்கள், ஆராய்ச்சியாளர்கள், வங்கியாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இந்த மாபெரும் வேளாண் கண்காட்சியில் பங்கேற்க உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



இந்த சந்திப்பின் போது அக்ரி இண்டெக்ஸ் துணை தலைவர் ஸ்ரீஹரி, கொடிசியா செயலாளர் சசிகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter