உடுமலையில் இளநீர் கொள்முதல் விலை ரூ.32 ஆக நிர்ணயம்!

உடுமலை, பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வாரத்தை விட, ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், ஒரு டன் இளநீரின் விலை ரூ.12,250 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: உடுமலையில் இளநீர் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை, கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு கொள்முதல் விலை ரூ.1 உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது,

இந்த வாரம் குட்டை, நெட்டை, வீரிய ஒட்டு இளநீரின் விலை கடந்த வார விலையை விட, ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு, 32 ரூபாயாக நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு டன் இளநீரின் விலை, ரூ.12,250 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கோடை சீசன் துவங்கியுள்ளதால், இளநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால், இளநீர் வரத்து குறைவாக உள்ளதால், வரும் காலங்களில் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. எனவே, இளநீரை குறைந்த விலைக்கு விவசாயிகள் விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter