கோவை வேளாண் பல்கலை சார்பில் உழவர்‌ வயல்‌ தின விழா - ‌நூற்றுக்கணக்கான விவசாயிகள்‌ பங்கேற்பு!

கோவை வேளாண் பல்கலையின் பயிர்ப்பாதுகாப்பு‌ மையம் சார்பில் ஈஷா இயற்கை விவசாய பண்ணையில்‌ இன்று நடைபெற்ற உழவர்‌ வயல்‌ தின விழாவில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வல்லுனர்கள் பல்வேறு விவகாரங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.


கோவை: கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் ஈஷா இயற்கை விவசாய பண்ணையில்‌ நடைபெற்ற உழவர் தினவிழாவில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கோவை தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழகத்தை‌ சேர்ந்த பயிர்ப்பாதுகாப்பு‌ மையம் மற்றும் விரிவாக்க கல்வி இயக்ககம்‌, தைவானில்‌ உள்ள உலக காய்கறி மையம்‌ மற்றும்‌ ஈஷா மண்‌ காப்போம்‌ இயக்கத்துடன்‌ இணைந்து நடத்திய விவசாயிகளுக்கான இலவச பயிற்சி கோவையில்‌ இன்று (மார்ச்‌ 25) நடைபெற்றது.



செம்மேட்டில்‌ உள்ள ஈஷா இயற்கை விவசாய பண்ணையில்‌ நடைபெற்ற இப்பயிற்சியில்‌ ரசாயனங்களை பயன்படுத்தாமல்‌ இயற்கை முறையில்‌ காய்கறி சாகுபடி செய்யும்‌ வழிமுறைகள்‌, களை மற்றும்‌ பூச்சி மேலாண்மை, பயிர்களை தாக்கும்‌ நோய்கள்‌ மற்றும்‌ அதற்கான இயற்கை வழி தீர்வுகள்‌ என விவசாயிகளின்‌ அடிப்படை பிரச்சனைகளை பற்றி அந்தந்த துறையை சேர்ந்த நிபுணர்கள்‌ உரையாற்றினர்.



குறிப்பாக, நூற்புழு வகைகள்‌, அதன்‌ தாக்குதல்கள்‌, அவற்றை தவிர்ப்பதற்கான வழிகள்‌ பற்றி முனைவர்‌ சீனிவாசன்‌‌ விளக்கமாக எடுத்துரைத்தார்‌. பயிர்களை தாக்கும்‌ நோய்கள்‌, நோய்க்காரணிகளான பூஞ்சைகள்‌, வைரஸ்கள்‌ குறித்து பல தகவல்களுடன்‌ பயிர்நோயியல்‌ துறையைச்சேர்ந்த முனைவர்‌ அங்கப்பன்‌ விளக்கினார்‌.

உயிரி தொழில்நுட்பவியல்‌ துறையை சேர்ந்த முனைவர்‌ மணிகண்ட பூபதி, உதவி தோட்டக்கலைத்‌துறை இயக்குநர்‌ நந்தினி, பயிற்சிப்‌ பிரிவு மற்றும்‌ வேளாண்‌ விரிவாக்க கல்வி இயக்ககத்தை சேர்ந்த முனைவர்‌ ஆனந்தராஜா, ஈஷா மண்‌ காப்போம்‌ இயக்கத்தை சேர்ந்த பிரபாகரன்‌ ஆகியோர்‌ தங்கள்‌ துறை சார்ந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டதோடு பங்கேற்பாளர்களின்‌ சந்தேகங்களுக்கு பதில்‌ அளித்தனர்‌.

மேலும்‌, மண்‌ காப்போம்‌ இயக்கத்தின்‌ பயிற்சியாளர்கள்‌ மாதிரி பண்ணையை விவசாயிகளுக்கு சுற்றி காண்பித்து பல்வேறு விவசாய தொழில்நுட்பங்கள்‌ குறித்தும்‌ விளக்கம்‌ அளித்தனர்‌.

Newsletter