தாராபுரம் அருகே அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மக்காச்சோளம் ஏலம்!

அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், கொண்டு வந்த 21,609 கிலோ மக்காச்சோளம், ரூ.4.85 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ.4.85 லட்சத்துக்கு மக்காச்சோளம் ஏலம் எடுக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தாராபுரத்தை அடுத்த அலங்கியத்தில் திருப்பூர் விற்பனை குழுவின் அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்றைய தினம் (24.03.2023) மக்காச்சோளத்திற்கான மறைமுக ஏலம் நடைபெற்றது.



இதற்காக திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் 21,609 கிலோ மக்காச்சோளத்தை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இந்த ஏலத்தில், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற ஏலத்தில், மக்காசோளம் குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.2,247க்கும் குறைந்த பட்சமாக ரூ.2,238-க்கும் விலை போனது. இதன் மூலம் மொத்தமாக ரூ.4 லட்சத்து 85 ஆயிரத்து 171க்கு மக்காச்சோளம் ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த ஏலத்திற்கான ஏற்பாடுகளை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மேற்பார்வையாளர் அருள்குமார் செய்திருந்தார்.

Newsletter