மானாவாரி நிலத்தில் நெல் விளைவிக்கும் கோவை விவசாயி - இயற்கை முறையில் பாரம்பரிய நெல் ரகத்தை பயிரிட்டு அசத்தல்

நிலத்தடி நீர் ஆயிரம் அடிக்கு கீழே உள்ள பகுதியில் இயற்கை முறையில் பாரம்பரிய நெல் ரகத்தை விளைவித்து மானாவாரி நிலத்தை நெல் விளையும் பூமியாக கோவையைச் சேர்ந்த விவசாயி செல்வராஜ் என்பவர் மாற்றி புதிய சாதனை படைத்துள்ளார்.



கோவை: கொங்கு மண்டல பகுதிகளில் வற்றாத ஜீவநதிகள் எதுவும் இல்லாத நிலையில் நிலத்தடி நீர் விவசாயத்திற்கு பிரதானமாக இருந்து வருகிறது. 20 - 30 ஆண்டுகளுக்கு முன்பு கிணற்று பாசனம் விவசாயத்திற்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தொடர்ந்து மழைப்பொழிவு குறைந்து நிலத்தடி நீர் படிப்படியாக குறைந்தது.

இதன் காரணமாக ஆழ்துளை கிணறுகளே அதிக அளவில் தற்போது விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் ஒரு சில பகுதிகளில் ஆயிரம் அடிக்கு கீழே நிலத்தடி நீர் உள்ள நிலையில் விவசாய நிலங்கள் அதிக அளவில் மனை நிலங்களாக மாற்றப்பட்டு வருகிறது.



இந்நிலையில்தான் கோவை வெள்ளானைப்பட்டி பகுதியில் ஆயிரம் அடிக்கு கீழே உள்ள நிலத்தடி நீர் ஆதாரத்தை பயன்படுத்தி ஆழ்துளை கிணறு நீரை பயன்படுத்தி மானாவாரி நிலத்தை நெல் விளையும் விவசாய நிலமாக மாற்றி இருக்கிறார் விவசாயி செல்வராஜ்.



விமான நிலையம் அருகே உள்ள பகுதிகளில் விவசாய நிலங்கள் தொடர்ந்து மனை பிரிவுகளாக, கட்டிடங்களாக மாறி வரக்கூடிய தற்போதைய சூழலில், தனது இரண்டு ஏக்கர் நிலத்தில் பாரம்பரிய தூயமல்லி நெல் ரகத்தை பயிரிட்டு வெற்றியும் கண்டுள்ளார் விவசாயி செல்வராஜ்.

இந்த வெற்றிக்கு அவர் எடுத்த வழிமுறைகள் என்னென்ன தெரியுமா? வழக்கமாக பயிரிடும் சோளம், ராகி, கம்பு, கடலை பயிர்களை தவிர்த்து, நிலத்தில் சாதாரண உழவுக்கு பின், பூமியில் நீர் நிரப்பு நிலத்தை தயார் செய்துள்ளார்.



வழக்கமாக நெல் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் அடியுரம் மேலுரம் பூச்சிக்கொல்லி இவற்றை தவிர்த்து வேம்பு, நொச்சி, எருக்களை, ஊணங்குடி போன்றவற்றை பயன்படுத்தி மண்ணை பக்குவப்படுத்தியும் மீண்டும் சேற்று உழவுக்கு பின் நாற்றங்காலை அமைத்து நெற்செடிகளை உருவாக்கியுள்ளார்.



பின்னர் வயலில் வரப்பு அமைத்து நாற்று நடவு செய்து தற்போது 3 1/2 அடி உயர்த்திற்கு நெற்கதிர்கள் வளர்ந்து நிற்கின்றன. அடியுரம் மேலுரம் பூச்சிக்கொல்லி பயன்படுத்தாமல் களையெடுக்காமல் நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாராகி இருக்கும் இந்த சூழலுக்கு பாரம்பரிய தூயமல்லி ரகமே காரணம்.



ஏன்னா... நூற்றாண்டுகளுக்கு முன்னர் சேர சோழ பாண்டிய மன்னர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வந்த இந்த நெல் ரகம், தற்போது கொங்கு மண்டலத்தில் விவசாயி செல்வராஜின் முயற்சியால் இயற்கை முறையில் வளர்ந்து அறுவடைக்கு தயாராகி இருக்கிறது.



விவசாயி செல்வராஜின் இந்த முயற்சியும் வெற்றியும் மானாவாரி நிலத்தை வீட்டுமனைகளாகவும், தரிசாகவும் மாற்றும் எண்ணமுள்ள விவசாயிகள், பயனுள்ள வழியில் நிலத்தை விவசாயத்தில் பயன்படுத்த ஒரு முன்னுதாரணமாகவும், வழிகாட்டலாகவும் இருக்கும் என்றால் அது மிகையல்ல...

Newsletter