உடுமலையில் தக்காளி வரத்து அதிகரிப்பு - விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை!

உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் தக்காளி சாகுபடி செய்யப்படும் நிலையில், வரத்து அதிகரிப்பால் கடந்த வாரம் ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு பெட்டி தக்காளி, தற்போது, ரூ.100 - ரூ.140 என குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வரத்து அதிகரிப்பின் காரணமாக தக்காளி விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.



சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் காய்கறிகளில் ஒன்றாக தக்காளி உள்ளது. உடுமலை சுற்று வட்டாரப் பகுதிகளில், ஒவ்வொரு சீசனிலும், சராசரியாக, 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.

சொட்டு நீர் பாசனம், குழித்தட்டு முறை, நாற்று நடவு உள்ளிட்ட காரணங்களால், பருவ மழைக்கு பிறகு நடப்பு சீசனில், தக்காளி அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், உடுமலை பகுதியில் உற்பத்தியாகும் தக்காளி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளாவின் மறையூருக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.

தற்சமயம் உடுமலை சந்தைக்கு வழக்கத்தை விட தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தற்போதையநிலவரப்படி, 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டிக்கு, 100 முதல் 140 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்படுகிறது.

கடந்த வாரம், ஒரு பெட்டி, 200 ரூபாய்க்கு விலை போன நிலையில், தற்போது வரத்து அதிகரிப்பால் விலை சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். எனவே, தக்காளிக்கு நிலையான விலை நிர்ணயிக்க வேண்டும் எனவும் இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter