தாராபுரத்தில் மக்காச்சோளம் மறைமுக ஏலம் - ரூ.10.5 லட்சத்துக்கு விற்பனை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ.10.5 லட்சத்துக்கு மக்காச்சோளம் விற்பனையானது. அதிகபட்சமாக குவிண்டால் ஒன்று ரூ.2248, குறைந்தபட்சமாக ரூ.2210 என விலை நிர்ணயிக்கப்பட்டது.


திருப்பூர்: தாராபுரத்தை அடுத்த திருப்பூர் விற்பனைக்குழுவின் அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மக்காச்சோளத்திற்கான மறைமுக ஏலம் நடைபெற்றது. இதற்காக தாராபுரம், கோவிந்தாபுரம், திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்ணக்கான விவசாயிகள் மக்காச்சோளத்தை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இவர்கள் கொண்டு வந்த மக்காச்சோளம் மொத்தம் 47 ஆயிரத்து 226 கிலோ இருந்தது. இதனை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர்.

அப்போது, அதிகபட்சமாக குவிண்டால் ஒன்று ரூ.2 ஆயிரத்து 248-ம், குறைந்தபட்சமாக ரூ.2 ஆயிரத்து 210-ம் மக்காளச்சோளத்திற்கான விற்பனை விலையாக நிர்ணயிக்கப்பட்டு ஏலம் போனது.

அதன்படி, விவசாயிகள் கொண்டுவந்திருந்த மக்காச்சோளம் மொத்தமாக ரூ.10 லட்சத்து 59 ஆயிரத்து 754-க்கு விற்பனையானது. ஏலத்திற்கான ஏற்பாடுகளை மேற்பார்வையாளர் பெ.அருள்குமார் செய்திருந்தார்.

Newsletter