கோவையில் மார்ச்.1 முதல் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும்பணி தொடக்கம்!

கோவை மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நாளை முதல் 21 நாட்களுக்கு நடத்தப்படவுள்ளதாக மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் பெருமாள்சாமி அறிவித்துள்ளார். வீடுகளுக்கு நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.


கோவை: கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் தேசிய கால்நடை நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழக அரசு கால்நடைகளுக்கு சிறப்பு தடுப்பூசி இயக்கத்தைத் தொடங்க உள்ளது. நாடு முழுவதும் உள்ள கால்நடைகளை பாதிக்கும் 'கோமாரி' வைரஸ் தொற்றுக்கான குறிப்பீட்டின்படி இந்தத் தடுப்பூசி இயக்கம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த சிறப்பு தடுப்பூசி இயக்கம் மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 21 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள 92 லட்சம் கால்நடைகளில், கோவை மாவட்டத்தில் மட்டும் சுமார் 2,64,000 கால்நடைகள் உள்ளன. இவற்றில், 2,37,000 கால்நடைகள் தடுப்பூசிக்கு தகுதியுடையவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அதன்படி, 91 கால்நடை மருத்துவர்கள் தலைமையில் 86 குழுக்களால் இந்த கோமாரி நோய் தடுப்பூசி இயக்கம் முன்னெடுக்கப்படும். அவர்கள் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று கால்நடைகளுக்கு தடுப்பூசிகளை செலுத்தவுள்ளனர்.

இது தொடர்பாக கோவை மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ஆர்.பெருமாள்சாமி கூறியதாவது: இந்த தடுப்பூசி சமீபத்தில் எடுக்கப்பட்ட முயற்சி அல்ல. இது பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது, ஆனால் கோவிட் -19 பரவலால் தாமதமானது.

கன்றுக்குட்டிகள் 4 மாதங்களுக்கு மேல் இருக்க வேண்டும் என்ற அளவுகோலின் கீழ் இலக்கு எண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஒவ்வொரு கால்நடைக்கும் அதன் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தனித்தனி ஊசி மூலம் தடுப்பூசி போடப்படும். ஒரு சில கால்நடைகளின் ரத்த மாதிரிகள் தடுப்பூசி போடுவதற்கு முன்பும், தடுப்பூசி போடுவதற்குப் பின்னும் எடுக்கப்பட்டு கால்நடைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை ஆய்வு செய்து நோய் விலக்கு விகிதம் கண்காணிக்கப்படவுள்ளது.

பிரில்லியன்ட் பார்மாசூட்டிகல்ஸ் தயாரிக்கும் போதுமான தடுப்பூசிகளை பல்வேறு விதிமுறைகள் மற்றும் தர சோதனைகளின் கீழ் அரசாங்கம் வழங்கவுள்ளது. கோவை மாவட்டத்தைப் பொருத்தவரை, விவசாயிகள் மற்றும் இதர பால் உற்பத்தியாளர்களுக்கு இந்த இயக்கம் தெரியும். இருப்பினும், விவசாயிகள் சங்கம், விவசாயக் குழுக்களுடன் தொடர்பில் உள்ளபோதும், அடுத்தடுத்த துறைகள் மூலமும் கோமாரி நோய் தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வையும் தகவல்களையும் முன்னெடுத்துள்ளோம்.

கோமாரி வைரஸ் தொற்று பொதுவாக எஃப்எம்டி (கால் மற்றும் வாய் நோய்) என்று குறிப்பிடப்படுகிறது. இது கால்நடைகளின் வாய் மற்றும் குளம்புகளில் கொப்புளங்களை ஏற்படுத்துகிறது. கடுமையான தொற்றுநோயை ஏற்படுத்துகிறது. காற்றுவழியில் இது அதிகம் பரவும் தன்மைகொண்டது. இதனால் கால்நடைகளுக்கு உயிரிழப்பும், கருக்கலைப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. நோய் பாதித்த கால்நடைகளின் உறுப்புகளை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் அல்லது சோடியம் கார்பனேட் அல்லது உப்பு கரைசல் மூலம் சுத்தம் செய்வதன் மூலம் பாதிப்பை தடுக்க இயலும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter