உடுமலையில் பீட்ரூட் சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள் - நல்ல விலை கிடைப்பதாகவும் மகிழ்ச்சி

உடுமலை அடுத்த குடிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள், 3 மாதங்களில் அறுவடை செய்யும் வகையில் உள்ளதாலும், நல்ல விளைச்சலும், விலையும் கிடைப்பதாலும், பீட்ரூட் சாகுபடியில் அதிகளவில் ஆர்வம் காட்டுவதாக தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள விவசாயிகள், நல்ல விளைச்சலும், விலையும் கிடைப்பதால் பீட்ரூட் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உடுமலை அடுத்த குடிமங்கலம் பகுதியில் உள்ள விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் மூலம் அதிகளவில், பீட்ரூட் சாகுபடி செய்து வருகின்றனர்.



மலைப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு வந்த பீட்ரூட் தற்போது சமவெளிப் பகுதிகளிலும் சாகுபடி செய்யப்படுகிறது.



பீட்ரூட் சாகுபடி செய்தால் 80 முதல் 90 நாள்களில் அறுவடைக்கு தயாராகி விடும் என்பதால் விவசாயிகள் பீட்ரூட் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதற்கு வசதியாக வெவ்வேறு காலங்களில் அறுவடை செய்யும் வகையில் சில நாட்கள் இடைவெளி விட்டு விதைக்கப்படுகிறது.

இந்நிலையில், பீட்ரூட் சாகுபடி செய்வது குறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது, குறுகிய காலப் பயிர் குடிமங்கலம் பகுதியில் கிணற்றுப்பாசனம் மூலம் பீட்ரூட் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம்.

ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய 2 கிலோ விதைகள் தேவைப்படுகிறது. ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய உழவு, களை எடுத்தல், மருந்து தெளித்தல் உரமிடுதல் அறுவடை செய்தல் என ஏக்கருக்கு 55 ஆயிரம் வரை செலவாகிறது.



கோடைகாலங்களில் பீட்ரூட் மகசூல் குறைந்தும் குளிர்காலத்தில் மகசூல் அதிகரித்தும் காணப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 10 டன் வரை மகசூல் கொடுக்கும். கடந்த காலங்களில் ஒரு கிலோவிற்கு சராசரியாக ரூ.15க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.



வியாபாரிகள் தோட்டங்களுக்கே நேரடியாக வந்து அறுவடை செய்து கழுவி, சுத்தம் செய்து பைகளில் அடைத்து எடுத்துச் செல்கிறார்கள்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் பீட்ரூட் உடுமலை, பொள்ளாச்சி மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது.பீட்ரூட் சாகுபடி விவசாயிகளுக்கு சராசரியாக நல்ல விலை கிடைத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter