வறட்சி காரணமாக தண்ணீரை விலைக்கு வாங்கி நாற்றங்காலுக்கு பாய்ச்சும் விவசாயி

தஞ்சாவூர் அருகேயுள்ள கண்டியூர் கிராமத்தில் நீர் பற்றாக்குறை காரணமாக, நாற்றங்காலுக்கு தேவையான நீரை டேங்கர் லாரி மூலம் விலை கொடுத்து வாங்கி வயலுக்குப் பாய்ச்சி வருகிறார் விவசாயி.

கண்டியூர் உள்ளிட்ட கிராமங்கள் குடமுருட்டி ஆறு மூலம் பாசனம் பெறுகின்றன. இந்நிலையில், மேட்டூர் அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கல்லணை செப். 24-ம் தேதி திறக்கப்பட்டது. அப்போது, குடமுருட்டி ஆற்றில் தண்ணீர் வந்தது.

இதை நம்பி கண்டியூர் கிராமத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் விவசாயி கிருஷ்ணன் 4 மூட்டைகளில் விதை நெல்லை வாங்கி விதைப்பு செய்தார். அதன் பிறகு தண்ணீர் வரவில்லை. அப்பகுதியில் மழையும் இல்லாததால் நாற்றங்கால்கள் காயத் தொடங்கின.

சற்று தொலைவில் ஆழ்குழாய் மோட்டார் பம்ப்செட் இருந்தாலும், நிலத்தடி நீர் மிகவும் குறைந்துவிட்டதால் தண்ணீர் பெற வாய்ப்பு இல்லாத நிலை உள்ளது.
எனவே, 6,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு டேங்கர் லாரி தண்ணீர் ரூ. 2,000 வீதம் 5 டேங்கர் லாரி தண்ணீரை ரூ. 10,000-க்கு வாங்கி நாற்றங்காலுக்குப் பாய்ச்சி வருகிறேன். தற்போது கடுமையான வெயில் நிலவுவதால், நாற்றங்காலுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இல்லாவிட்டால் நாற்றங்கால்கள் காய்ந்துவிடும். எனவே, டேங்கர் லாரி மூலம் தண்ணீர் வாங்கி பாய்ச்சி வருகிறேன் என்றார் கிருஷ்ணன்.

இதுகுறித்து தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்க மாவட்டத் துணைச் செயலர் திருப்பூந்துருத்தி பி. சுகுமாரன் தெரிவித்தது:
குடமுருட்டி ஆற்றில் வினாடிக்கு 2,500 கனஅடி வீதம் தண்ணீர் விட்டால்தான் முழுமையாக நீர் பாய வாய்ப்புள்ளது. ஆனால், வினாடிக்கு 1,000 கனஅடி வீதம்தான் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. ஏற்கெனவே, குடமுருட்டி ஆற்றிலும், அதைச் சார்ந்த திருத்துக்கால் வாய்க்கால், கண்டியூர் வாய்க்கால்கள் முழுமையாகத் தூர் வாரப்படாததாலும், திருட்டு மணல் அள்ளப்படுவதாலும் தண்ணீர் பாயவில்லை.

பயிர்கள் வளர்ந்து இடைப்பட்ட தருணத்தில் தண்ணீர் பற்றாக்குறை வந்தால் கூட ஓரளவுக்குச் சமாளித்துவிடலாம். ஆனால், தொடக்க நிலையிலேயே தண்ணீர் பற்றாக்குறை இருந்தால் சமாளிக்க முடியாது. சாகுபடி செலவு அதிகரிப்பதுடன் நஷ்டத்தைத்தான் விவசாயிகள் சந்திக்க நேரிடும். வயலை தரிசாக போட்டாலும் களைகள் அதிகரித்து மண்வளம் பாதிக்கப்படும். எனவே, விவசாயிகள் கடன் வாங்கி டேங்கர் லாரி மூலம் தண்ணீர் பாய்ச்சும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார் சுகுமாரன்.

Newsletter