வேளாண்மைதுறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளுக்கான வேளாண் மேற்கு மண்டல குழு கூட்டம்

கோவையில் நடைபெற்ற வேளாண்மை மேற்கு மண்டல கூட்டத்தில் உணவு தானிய உற்பத்தி இலக்கான 77.610 மெட்ரிக் டன் சாதனை அடைய திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தனர்.


கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண்மைதுறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளுக்கான வேளாண் மேற்கு மண்டல குழு கூட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் சூழ்நிலைக்கு ஏற்ற பயிர் சாகுபடி, இயற்கை இடர்பாடுகள் மேலாண்மை வரப்பு பயிர் மற்றும் பூச்சி கட்டுப்பாடு மேலாண்மை, தரமான விலை பொருள் உற்பத்தி குறித்து விளக்கினர்.

மேலும் மேற்கு மண்டல விவசாயிகளிடம் கருத்துக்களை கேட்டும், பிரச்சனைகள் குறித்தும் வேளாண்மைதுறை இயக்குனர் கேட்டறிந்தார், மேலும் மேற்கு மண்டலத்தில் வனவிலங்குகள் மற்றும் மயில்கள், காட்டுப்பன்றிகள், யானைகள் ஆகியவற்றால் அதிக அளவில் பயிர் சேதம் ஏற்படுவதாகவும், பலத்த காற்று, சுழல் காற்றின் மூலம் வாழை மற்றும் தென்னை சேதம் ஆகியவற்றிற்கு உண்டான இழப்பீடு தொகையும் தென்னை பயிருக்கு ஏற்ப பயிர் இழப்பீடு தொகை வழங்கிட விவசாயிகள் கோரிக்கையை முன் வைத்தனர்.



ஆதார விலையின் மூலம் கொப்பரை கொள்முதல் ஜூலை 31 ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் விவசாயிகளுக்காக இதனை டிசம்பர் 31ஆம் தேதி வரை தொடர்ந்து செயல்படுத்திட வேண்டும் எனவும் கோரிக்கையை முன் வைத்தனர். விவசாயிகளின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என கூட்டத்தில் தெரிவித்தார்.

தமிழக அரசு வேளாண்மை துறைக்கு என தனியாக நிதி நிலை அறிக்கையில் தெரிவித்ததின் படி கோவை மாவட்டத்தில் பிரதான பெயராக தென்னை 88.647 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு வருவதும், 2022-23 ஆண்டில் நெற்பயிர் ஆயிரம் எக்டர் பரப்பிலும், சிறுதானியம் 30.350 எக்டர் பரப்பிலும், பயிறு வகைகள் 91.00 எக்டர் பரப்பிலும் சாகுபடி செய்து, உணவு தானிய உற்பத்தி இலக்கான 77.610 மெட்ரிக் டன் சாதனை அடைய திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் முன்னிலை வகித்தார் இதில் மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, வேளாண்மை துறை இணை இயக்குனர் சித்ராதேவி, வேளாண்மை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி மற்றும் மண்டல அளவிலான வேளாண்மை துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter