கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில்‌ 'ஆடிப்‌பட்டம்‌' காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பு..!

TNAU-வில் வேளாண்‌ மற்றும்‌ ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில்‌ இயங்கி வரும்‌ தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ விலை முன்னறிவிப்புத்‌ திட்டமானது, தக்காளி, கத்திரி மற்றும்‌ வெண்டை ஆகிய காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பை உருவாக்கியுள்ளது.



கோவை: தமிழ்நாட்டில்‌, ஆடிப்பட்டம்‌ முக்கிய மானாவாரி சாகுபடி பருவமாகும்‌. இக்காலகட்டத்தின்‌ பயிர்‌ உற்பத்தி தென்மேற்கு பருவ மழையைச் சார்ந்துள்ளது. பெரும்பாலும்‌ தானியங்கள்‌, எண்ணெய்‌ வித்துக்கள்‌ மற்றும்‌ காய்கறிகள்‌ ஆடிப்பட்டத்தில்‌ சாகுபடி செய்யப்படுகின்றது.

பருவமழையின்‌ நிலை மற்றும்‌ விளைப்பொருட்களுக்கான விலை ஆகியவற்றின்‌ அடிப்படையில்‌ விவசாயிகள்‌ தங்கள்‌ நடவு முடிவுகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌, வேளாண்‌ மற்றும்‌ ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில்‌ இயங்கி வரும்‌ தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ விலை முன்னறிவிப்புத்‌ திட்டமானது, தக்காளி, கத்திரி மற்றும்‌ வெண்டை ஆகிய காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பை உருவாக்கியுள்ளது.

தக்காளி

தேசிய தோட்டக்கலை வாரியத்தின்‌ முதலாவது முன் கூட்டிய அறிக்கையின்படி, 2021-22 ஆம்‌ ஆண்டு இந்தியாவில்‌ தக்காளி 8.31 இலட்சம்‌ எக்டர்‌ பரப்பளவில்‌ சாகுபடி செய்யப்பட்டு 203.00 இலட்சம்‌ டன்கள்‌ நம்‌ நாட்டில்‌ உற்பத்தியாகும்‌ என்று அறிவித்துள்ளது. மத்திய பிரதேசம்‌, கர்நாடகா, ஆந்திர பிரதேசம்‌ மற்றும்‌ தமிழ்நாடு ஆகியவை தக்காளி அதிகமாக உற்பத்தி செய்யும்‌ மாநிலங்களாகும்‌. இந்தியாவின்‌ மொத்த தக்காளி உற்பத்தியில், தமிழ்நாடு 7-சதவீதம்‌ பங்களிக்கின்றது.

தமிழ்நாட்டில்‌, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம்‌, திருப்பூர்‌, தேனி மற்றும்‌ திண்டுக்கல்‌ ஆகிய மாவட்டங்கள்‌ தக்காளி உற்பத்தி செய்யும்‌ முக்கிய மாவட்டங்களாகும்‌. தமிழ்நாட்டில்‌ அனைத்து பருவங்களிலும்‌ தக்காளி சாகுபடி செய்யப்பட்டாலும்‌ ஆடிப்‌ பருவம்‌ சாகுபடியை விவசாயிகள்‌ அதிகளவு தேர்வு செய்கின்றனர்.

கோயம்புத்தூர்‌ சந்தைகளுக்கு உடுமலைபேட்டை, ஆலந்துறை, பொள்ளாச்சி கிணத்துகிடவு, சேலம்‌ மற்றும்‌ செஞ்சிமலை ஆகிய பகுதிகளிலிருந்து தக்காளி வரத்தானது வருகிறது. கர்நாடகாவிலிருந்து தக்காளி வரத்தானது ஜூலை 2022 முதல்‌ வரத்தொடங்கியுள்ளது. இவ்வரத்தானது ஆகஸ்ட்‌ மாதம்‌ 2022 இறுதி வரை வரும்‌ என எதிர்பார்க்கப்படுகிறது.

கத்திரி

தேசிய தோட்டக்கலை வாரியத்தின்‌ முதலாவது முன கூட்டிய அறிக்கையின்படி, 2021- 22 ஆம்‌ ஆண்டு இந்தியாவில் கத்திரி 7.44 இலட்சம்‌ எக்டர்‌ பரப்பளவில்‌ சாகுபடி செய்யப்பட்டு 127.68 இலட்சம்‌ டன்கள்‌ உற்பத்தியாகும்‌ என்று அறிவித்துள்ளது. மேற்கு வங்காளம்‌, ஒடிசா, பீகார்‌, குஜராத்‌ மற்றும்‌ மத்திய பிரதேசம்‌ ஆகிய மாநிலங்கள்‌ கத்திரி உற்பத்தியில்‌ முக்கிய பங்களிக்கின்றன. தமிழ்நாட்டில்‌, தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல்‌, திருவண்ணாமலை மற்றும்‌ வேலுர்‌ ஆகிய மாவட்டங்கள்‌ கத்திரி பயிரிடுவதில்‌ பெரும்பங்கு வகிக்கின்றன. வாத்தக மூலங்களின்படி, கோயம்புத்தூர்‌, சந்தைக்கு பொள்ளாச்சி, நாச்சிப்பாளையம்‌, மற்றும்‌ தொண்டாமுத்தூர்‌ ஆகிய பகுதிகளிலிருந்து கத்திரி வருகிறது. பளபளப்பான அடர்‌ ஊத நிறகத்திரி இரகங்கள்‌ கோயம்புத்தூர்‌ நுகர்வோரால்‌ அதிகளவு விரும்பப்படுகிறது.

வெண்டை

தேசிய தோட்டக்கலை வாரியத்தின்‌ முதலாவது முன்கூட்டிய அறிக்கையின்படி, 2021-22 ஆம்‌ ஆண்டு இந்தியாவில்‌ வெண்டை, 5.23 இலட்சம்‌ எக்டர்‌ நிலப்பரப்பில்‌ பயிரிடப்பட்டு 64.16 இலட்சம்‌ டன்கள்‌ உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில்‌, குஜராத்‌, மேற்கு வங்காளம்‌, பீகார்‌, மத்திய பிரதேசம்‌ மற்றும்‌ ஒடிசர்‌ ஆகிய மாநிலங்களில்‌ வெண்டை உற்பத்தி பெருமளவில்‌ செய்யப்படுகின்றது.

தமிழ்நாட்டில்‌, சேலம்‌, தேனி, தருமபுரி, திருவள்ளூர்‌, கோயம்புத்தூர்‌ மற்றும்‌ மதுரை ஆகிய மாவட்டங்கள்‌ வெண்டை உற்பத்தியில்‌ முன்னிலை வகிக்கின்றன. குறிப்பாகக் கோயம்புத்தூர்‌ சந்தைக்கு, நாச்சிபாளையம்‌ பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை மற்றும்‌ ஒட்டன்சத்திரம்‌ ஆகிய பகுதிகளிலிருந்து வெண்டை வரத்தானது அதிகளவு காணப்படுகிறது.

விலை முன்னறிவிப்புத்‌ திட்டம்‌, ஒட்டன்‌ சத்திரம்‌ சந்தையில்‌ கடந்த 14 ஆண்டுகளாக நிலவிய தக்காளி, கத்திரி மற்றும்‌ வெண்டை விலையைச் சந்தை ஆய்வுகள்‌ மேற்கொண்டது. ஆய்வு முடிவுகளின்‌ அடிப்படையில்‌ அறுவடையின்‌ போது தரமான தக்காளியின்‌ பண்ணை விலை ரூ.20 முதல்‌ ரூ.23, வரை, நல்ல தரமான கத்தரி கிலோவுக்கு ரூ. 25, முதல்‌ ரூ.27, ஆகவும்‌ மற்றும்‌ தரமான வெண்டையின்‌ பண்ணை விலை ரூ.15 முதல்‌ ரூ.18, வரை இருக்கும்‌ என்று அறியப்படுகிறது.

எனவே, விவசாயிகள்‌ மேற்கூறிய சந்தை ஆலோசனைகளின்‌ அடிப்படையில்‌ விதைப்பு முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்‌.

மேலும்‌ விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்‌

உள்நாட்டு மற்றும்‌ ஏற்றுமதி சந்தைத்‌ தகவல்‌ மையம்‌,

வேளாண்‌ மற்றும்‌ ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்‌,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோயம்புத்தூர்-641 003.

தொலைபேசி- 0422-2431405

இயக்குனர்‌ மற்றும்‌ முனை அதிகாரி

தமிழ்நாடு நீர்வள நிலவளத்‌ திட்டம்‌,

நீர்‌ நுட்ப மையம்‌,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோயம்புத்தூர்-641 003.

தொலைபேசி -0422-6611278

தொழில்நுட்ப விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்‌

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌,

காய்கறிப்‌ பயிர்கள்‌ துறை,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோயம்புத்தூர்‌ - 641 003.

தொலைபேசி எண்‌ - 0422-6611374

Newsletter