கோவை TNAU-வில் நெல் பயிர் நடவு துவக்க விழா: 4-சென்ட் நிலத்தில் நெல் நடவு செய்த மாணவர்கள்..!

இதில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக உயர் ‌அதிகாரிகள்‌, பேராசிரியர்கள்‌ மாணவர்களுடன்‌ வயலில்‌ இறங்கி நெல்‌ நடவை துவக்கி வைத்தனர்.


கோவை: கோவையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நன்செய் பண்ணையில் மாணவர்களின் நெல் பயிர் நடவு செய்யும் விழா இன்று காலை தொடங்கியது.



கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, இளமறிவியல்‌ (வேளாண்மை) நான்காம்‌ ஆண்டு படிக்கும்‌ மாணவர்கள்‌ நன்செய்‌ பண்ணையில்‌ நெல்‌ நடவு செய்தனர்‌. இளமறிவியல்‌ (வேளாண்மை) படிக்கும்‌ மாணவர்கள்‌ பாடத்திட்டத்தின்‌ ஒரு பகுதியாக தாங்கள் ‌படித்த அறிவியல்‌ தொழில்நுட்பங்களைக்‌ கொண்டு தானாக வயலில்‌ நெற்பயிர்‌ பயிரிடுவர்‌.

மாணவர்களுக்கு 4 சென்ட்‌ அளவு நிலம்‌ வழங்கப்படும்‌. அதில்‌ அவர்கள்‌ சேற்றுழவு முதல்‌ அறுவடை முதலான அனைத்து பணிகளையும்‌ செய்வர்‌. மாணவர்களின்‌ நெற்பயிர்‌ நடவு, பல்கலைக்கழக நன்செய்‌ பண்ணையில்‌ இன்று காலை 6.30 மணியளவில்‌ துவங்கியது. இந்த துவக்க விழாவில்‌ கலந்து கொண்ட பல்கலைக்கழக உயர்‌ அதிகாரிகள்‌, பேராசிரியர்கள்‌ மற்றும்‌ மாணவர்களைப் பாடப்பேராசிரியர்‌ முனைவர்‌. S.D. சிவக்குமார்‌ வரவேற்றார்‌.

மாணவர்கள்‌ மேற்கொள்ள வேண்டிய மேலாண்மை முறைகள்‌ குறித்து பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌ உழவியல்‌ துறையைச் சேர்ந்த முனைவர்‌ S. பன்னீர்செல்வம்‌ விளக்கம்‌ அளித்தார்‌. முனைவர்‌ N. வெங்கடேச பழனிசாமி, முதன்மையர்‌ (வேளாண்மை) நடவு விழாவை துவக்கி வைத்தார்‌.



முனைவர்‌ M.R. கலாராணி இயக்குநர்‌ (பயிர்‌ மேலாண்மை இயக்குநரகம்‌), முனைவர்‌. V. பாலசுப்ரமணி (தேர்வு கட்டுப்பாட்டாளர்‌), முனைவர்‌ N. மரகதம், முதன்மையர்‌ (மாணவர்நலம்‌), முனைவர்‌. R. உமாராணி, இயக்குநர்‌ (விதை உற்பத்தி) ஆகியோர்‌ மாணவர்கள்‌ ஏற்பாடு செய்திருந்த கருத்துரு மற்றும்‌ செயல்‌ விளக்கங்களை பார்வையிட்டு மாணவர்களுடன்‌ கலந்துரையாடினார்கள்‌.

பின்பு பல்கலைக்கழக உயர் ‌அதிகாரிகள்‌, பேராசிரியர்கள்‌ மாணவர்களுடன்‌ வயலில்‌ இறங்கி நெல்‌ நடவை துவக்கி வைத்தனர்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter