கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை: ஒரு டிப்பர் ரூ.1600 வரை விற்பனை!

தமிழகத்தில் வரத்து குறைவால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த மாதம் வரை 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 28 கிலோ கொண்ட ஒரு தக்காளி டிப்பர் தற்பொழுது 5 மடங்கு உயர்ந்து 1600 வரை விற்பனை செய்யப்படுகிறது.


கோவை:தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்து தக்காளி விலை உயர்ந்தது. விளைச்சல் அதிக அளவில் இருந்ததால் கடந்த மாதம் வரை ஒரு கிலோ தக்காளி ரூ.15 வரை விற்கப்பட்டது. பின்னர் பரவலாக மழை பெய்ததன் காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்தும் குறைந்தது. இதனால், கடந்த சில தினங்களாக தக்காளி விலையானது உயர்ந்து வருகிறது. குறிப்பாக திருப்பூர் தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டில் நாள்தோறும் 25 டன் முதல் 30 டன் வரை தக்காளியானது இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் தற்போது வரத்து குறைவால் கர்நாடக மாநிலத்தில் இருந்து தக்காளியை இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் நிலவி வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 300 ரூபாய்க்கு விற்பனை செய்த 28 கிலோ எடை கொண்ட ஒரு டிப்பர் தற்போது ஐந்து மடங்கு விலை உயர்ந்து, 1600 ரூபாய்க்கு, 15 கிலோ எடை கொண்ட டிப்பர் 800 ரூபாய்க்கு விலை போவதாக தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி விலை குறைந்த சமயங்களில் வாடிக்கையாளர்கள் அதிகளவில் தக்காளியை வாங்கி செல்வதாகவும் தற்பொழுது விலையேற்றத்தின் காரணமாக சில்லறை வியாபாரிகள் கூட ஒரு டிப்பர் மட்டும் வாங்கி செல்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சமீபத்தில்தான் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. இதனால் அடுத்த சில மாதங்களுக்கு வெளிமாநில தக்காளியை மட்டும் சார்ந்து இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே தக்காளி விலை குறைய வாய்ப்பில்லை என்றும், விலை உயர்வதற்கான சாத்தியக்கூறுகள் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Newsletter