ஆடிப் பட்டம் காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பை வெளியிட்டது வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்

கோவை : ஆடிப் பட்டம் காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பை தமிழ்நாடு வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

கோவை : ஆடிப் பட்டம் காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பை தமிழ்நாடு வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. 

தக்காளி :

தேசிய தோட்டக்கலை வாரியத்தின் முதலாவது முன்கூட்டிய அறிக்கையின்படி, 2018-19 ஆம் ஆண்டு இந்தியாவில் தக்காளி 8.14 லட்சம் எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு, 202.15 லட்சம் டன்கள் உற்பத்தியாகும் என்று அறிவித்துள்ளது. மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவை தக்காளி அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலங்களாகும். இந்தியாவின் மொத்த தக்காளி உற்பத்தியில், தமிழ்நாடு 5 சதவீதத்திற்கும் குறைவாகவே பங்களிக்கின்றது. தமிழகத்தில், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் தக்காளி உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்களாகும். 

தமிழகத்தில் அனைத்து பருவங்களிலும் தக்காளி சாகுபடி செய்யப்பட்டாலும், ஆடிப் பருவம் சாகுபடியை விவசாயிகள் அதிகளவு தேர்வு செய்கின்றனர். கோவை சந்தைகளுக்கு உடுமலைபேட்டை, ஆலந்துறை, பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கிடவு ஆகிய பகுதிகளிலிருந்து தக்காளி வரத்தானது வருகிறது. கர்நாடகாவிலிருந்து தக்காளி வரத்தானது ஜுலை 2019 முதல் வரத் தொடங்கியுள்ளது. இவ்வரத்தானது ஆகஸ்ட் மாத இறுதி வரை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கத்திரி :

தேசிய தோட்டக்கலை வாரியத்தின் முதலாவது முன்கூட்டிய அறிக்கையின்படி, 2018-19 ஆம் ஆண்டு இந்தியாவில் கத்திரி 7.35 லட்சம் எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு, 129.87 லட்சம் டன்கள் உற்பத்தியாகும் என்று அறிவித்துள்ளது. மேற்கு வங்காளம், ஒடிசா, பீகார், குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் கத்திரி உற்பத்தியில் முக்கிய பங்களிக்கின்றன. தமிழ்நாட்டில், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்கள் கத்திரி பயிரிடுவதில் பெரும்பங்கு வகிக்கின்றன. வர்த்தக மூலங்களின்படி, கோவை சந்தைக்கு பொள்ளாச்சி, நாச்சிப்பாளையம், மற்றும் தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளிலிருந்து கத்திரி வருகிறது.

வெண்டை :

தேசிய தோட்டக்கலை வாரியத்தின் முதலாவது முன்கூட்டிய அறிக்கையின்படி, 2018-19 ஆம் ஆண்டு இந்தியாவில் வெண்டை 5.11 லட்சம் எக்டர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு, 62.19 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மேற்கு வங்காளம், குஜராத், பீகார், ஒடிசா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெண்டை உற்பத்தி பெருமளவில் செய்யப்படுகின்றது. தமிழகத்தில் சேலம், தேனி, தருமபுரி, திருவள்ளூர், கோவை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்கள் வெண்டை உற்பத்தியில் முன்னிலை வகிக்கின்றன. குறிப்பாக, கோவை சந்தைக்கு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளிலிருந்து வெண்டை வரத்தானது அதிகளவு காணப்படுகிறது.

இச்சூழலில், விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இயங்கி வரும் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம், ஒட்டன்சத்திரம் சந்தையில் கடந்த 14 ஆண்டுகளாக நிலவிய தக்காளி, கத்திரி மற்றும் வெண்டை விலையை சந்தை ஆய்வுகள் மேற்கொண்டது. ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் அறுவடையின்போது தரமான தக்காளியின் பண்ணை விலை ரூ.18 முதல் ரூ.20 வரையும், நல்ல தரமான கத்திரி கிலோவுக்கு ரூ. 28 முதல் ரூ. 31 ஆகவும் மற்றும் தரமான வெண்டையின் பண்ணை விலை ரூ. 20 முதல் ரூ.22 வரை இருக்கும் என்று அறியப்படுகிறது. எனவே, விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனைகளின் அடிப்படையில் விதைப்பு முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.

Newsletter