நுண்ணீர் பாசனத் திட்டப்பணிகள் செயல்பாடு குறித்து கோவையில் வேளாண்மை கூடுதல் இயக்குனர் ஆய்வு

கோவை : சூலூர் வட்டாரம் காடம்பாடி கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நுண்ணீர் பாசனத் திட்டப் பணிகள் குறித்து சென்னை கூடுதல் வேளாண்மை இயக்குனர் (பணி மேலாண்மை) ஜே. விஜயராணி, இன்று ஆய்வு செய்தார்.

கோவை : சூலூர் வட்டாரம் காடம்பாடி கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நுண்ணீர் பாசனத் திட்டப் பணிகள் குறித்து சென்னை கூடுதல் வேளாண்மை இயக்குனர் (பணி மேலாண்மை) ஜே. விஜயராணி, இன்று ஆய்வு செய்தார்.



தமிழகத்தில் பெருகிவரும் பாசன நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வகையிலும், தற்போது இருப்பில் உள்ள நீர் ஆதாரங்களை திறம்பட உபயோகப்படுத்தும் வகையிலும், தமிழ்நாடு அரசு வேளாண்மை துறையின் மூலம் 'வேளாண் பெருமக்கள் நுண்ணீர் பாசனத் திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கோவை மாவட்ட விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் மற்றும் மழை தூவுவான் ஆகிய பாசன வகைகளுக்கான உபகரணங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.



இதன்படி, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. 

இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து சூலூர் வட்டாரம் காடம்பாடி கிராமத்தில் சென்னை கூடுதல் வேளாண்மை இயக்குனர் (பணி மேலாண்மை) ஜே. விஜயராணி நேரில் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, விவசாயிகளின் தென்னை பயிருக்கு வழங்கப்பட்ட சொட்டுநீர் பாசன உபகரணங்களை நேரில் ஆய்வு செய்து உரிய விவரங்களைக் கேட்டறிந்தார். மேலும், சொட்டுநீர் பாசன உபகரணங்களை முறையாக சுத்தம் செய்து பராமரிப்பதன் மூலம், அதனை நீண்ட காலத்திற்குப் பயன்படுத்த முடியும் என்பதை விவசாயிகளுக்கு எடுத்துக் கூறி, அதற்கான செயல் முறைகளையும் விளக்கினார்.



சொட்டு நீர் பாசன உபகரணங்களை பராமரிப்பது தொடர்பாக வேளாண் பெருமக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதை எடுத்துக் கூறிய அவர், நுண்ணீர் பாசன கருவிகளை பராமரிப்பது குறித்து வேளாண்மைத் துறை அலுவலர்களும், நுண்ணீர் பாசன நிறுவனத்தாரும் விவசாயிகளுக்கு முறையான வழிகாட்டுதல் மற்றும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். தென்னை மரங்களுக்கு இடையே ஊடுபயிராக பல மரங்கள் பயிர் செய்யலாம் எனவும், மாதுளை, பப்பாளி, சப்போட்டா, கொய்யா போன்ற பழ மரங்களை பயிர் செய்து பராமரிப்பதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பதையும் எடுத்துக் கூறினார்

இந்த ஆய்வின்போது, கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கே. பானுமதி, வேளாண்மை துணை இயக்குனர்கள் டாம்.பி. சைலஸ் மற்றும் சித்ராதேவி, சூலூர் வேளாண்மை உதவி இயக்குனர் சபீர் அகமது மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter