கோடை மழையைப் பயன்படுத்தி கோடை உழவு செய்யுமாறு விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்தல்

கோவை : கோவை மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் கோடை மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் உழவு செய்ய வேண்டும் என வேளாண்மைத்துறை வலியுறுத்தி உள்ளது.

கோவை : கோவை மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் கோடை மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் உழவு செய்ய வேண்டும் என வேளாண்மைத்துறை வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பானுமதி தெரிவித்திருப்பதாவது :- மானாவாரி நிலங்களில் உழவு செய்யாத கெட்டியான நிலத்தில் விழும் மழைநீர் மண் அரிப்பை ஏற்படுத்தி, வழிந்து வேகமாக நிலத்திலிருந்து வெளியேறி வீணாகிறது. மண்ணில் ஈர்த்துக்கொள்ளப்பட்ட நீரும் வெப்பத்தினால் விரைவில் ஆவியாகி வெளியேறுகிறது. இதனைத் தடுக்க கோடைப் பருவத்தில் கிடைக்கும் மழையைக்கொண்டு, உழவு செய்வதால் மண்ணின் நீர்பிடிப்புத்தன்மை அதிகரிக்கிறது.

கோடை உழவினால் களை செடிகளின் விதைகள், பூச்சிகளின் முட்டைகள், மண்ணின் மூலம் பரவும் பூஞ்சாண நோய்கள் ஆகியவற்றை அழிக்கலாம். மேலும், மண்ணிற்குள் எளிதில் காற்றோட்டமும், நீரும் புகும் தன்மை ஏற்படுகிறது. வழிந்தோடும் மழைநீரின் வேகம் தடுக்கப்பட்டு மண் அரிமானம் குறைந்து, மேலடுக்கு மண் இறுக்கத்தை தளர்த்தி மழைநீர் உட்புகும் தன்மை மேம்படுத்துகிறது. இவ்வகையில் சேகரிக்கப்பட்ட மழைநீர் பயிர்களுக்கு வறட்சியைத் தாங்கி வளர உதவுவதோடு, மண் அமைப்பை மேம்படுத்துகிறது. குறிப்பாக, நன்மை தரும் உயிரினங்களின் பெருக்கத்திற்கு உதவுகிறது.

மழைநீரில் கரைந்துள்ள தழைச்சத்து சேகரிக்கப்படுவதால் மண்வளம் மேம்படுகிறது. மேலும், மக்காச்சோளம் பயிரை தாக்கும் படைப்புழுக்களை கட்டுப்படுத்த கோடை உழவு மிக அவசியம். மக்காச்சோளம் பயிரிடுவதற்கு முன்கோடை உழவு செய்வதன்மூலம் மண்ணிலுள்ள கூட்டுப்புழுக்களை அழிக்கலாம். கோடையில் மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகள் கண்டிப்பாக ஊடுபயிர்களும், வயல் ஓரப்பயிர்களை சாகுபடி செய்வதால், புழுவின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். எனவே, விவசாயிகள் தற்போது பெய்துவரும் கோடை மழையைப் பயன்படுத்தி கோடை உழவு செய்து பயன்பெற வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Newsletter