குறைதீர்ப்பு நாளான இன்று மனு அளிக்க வந்த போத்தனூரை சேர்ந்த தம்பதியினர் மண்ணெண்ணெய் கேனுடன் வந்ததால் பரபரப்பு.
கோவை: கோவையில் கந்து வட்டிக் கொடுமையால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெயுடன் தற்கொலை செய்துகொள்ள வந்த தம்பதியினரால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு நாளான இன்று மனு அளிக்க வந்த போத்தனூரை சேர்ந்த ராஷ்மி, செல்வம் தம்பதியினர் மண்ணெண்ணெய் கேனுடன் வந்துள்ளனர்.
அப்போது பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் சோதனை செய்த போது மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், ராஷ்மி தனது அம்மா தமிழ்ச்செல்வி அப்பகுதியில் உள்ள கல்பனா என்பவரால் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கல்பனா தனது அம்மாவின் பெயரில் உள்ள காலிமனையிட பத்திரம் மற்றும் வெற்று வங்கி காசோலை ஆகியவற்றை வைத்துக்கொண்டு சில நபர்களைக் கொண்டு பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், போலி ஆவணம் தயாரித்து போலி கையொப்பமிட்டு பணம் பறிக்க முயற்சி செய்வதாகவும், அந்த நபர்களிடம் இருந்து தன்னையும் தனது அம்மாவையும் காப்பாற்ற வேண்டும் என கூறினார்.
மேலும், மண்ணெண்ணெயுடன் தம்பதியினர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.