மறைமுக தேர்தலில் திமுக கூட்டணி மாமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், அதிமுகவை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி மேயராக என்.தினேஷ்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து மேயர் இருக்கையில் அமர்ந்து பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நிறைவடைந்த நிலையில், நேற்று முன்தினம் 60 வார்டு மாமன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், திருப்பூர் மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 9.30 மணிக்கு திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட என். தினேஷ்குமார் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமாரிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
இதையடுத்து, தினேஷ்குமாரை எதிர்த்து வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததன் காரணமாக தினேஷ்குமார் போட்டியின்றி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனையடுத்து, மேயருக்கான அங்கி மற்றும் செங்கோல் அணிந்து மேயர் இருக்கையில் அமர்ந்து பொறுப்பேற்றுக் கொண்டார்.
மேயர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அவருக்கு திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்புராயன், திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
மறைமுக தேர்தலில் திமுக கூட்டணி மாமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், அதிமுகவை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.