அடிமட்ட உறுப்பினராக இருந்த என்னை உயர்ந்த பதவியில் உட்கார வைத்து அழகுபார்த்த முதலமைச்சரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருப்பேன் எனவும் கூறினார்.
கோவை: மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுவேன் என உறுதி கூறுவதாக கோவை மாநகராட்சியின் மேயர் பேட்டி அளித்துள்ளார்.
கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் மற்றும் திமுகவின் முதல் மேயர் என்ற இரட்டை பெருமையை கல்பனா ஆனந்தகுமார் பெற்றுள்ளார்.
கோவை மாநகராட்சியின் புதிய மேயராக திமுக வேட்பாளர் கல்பனா ஆனந்தகுமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேயர் தேர்தல் முடிவடைந்ததை அடுத்து மின்சாரதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி வருகை தந்து சிறப்பு செய்தார்.
மேயர் உடை அணிந்து வந்த கல்பனா ஆனந்தகுமார் மாநகராட்சி ஆணையர் ராஜகோபல் சுங்காரவிடம் இருந்து செங்கோல் பெற்றுக்கொண்டார்.
அதனை தொடர்ந்து மேயராக தேர்வு செய்யப்பட்ட கல்பனா ஆனந்தகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மேயராக என்னை தேர்வு செய்த முதல்வருக்கு நன்றி. இந்த அரிய வாய்ப்பை வழங்கிய உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றி. பொதுமக்களை நேரடியாக சந்தித்து கோரிக்கைகளை கேட்பேன்.
பொதுமக்கள் எப்பொழுது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம். மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுவேன் என உறுதி கூறுகிறேன்.
அடிமட்ட உறுப்பினராக இருந்த என்னை உயர்ந்த பதவியில் உட்கார வைத்து அழகுபார்த்த முதல்வரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருப்பேன் எனவும், கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் தடையின்றி குடிநீர் கிடைக்கவும், தெருவிளக்கு சாலை வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பள்ளிகளை மேம்படுத்துதல், அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துதல் போன்ற பணிகளில் கவனம் செலுத்துவேன் எனவும் கோவை மேயர் கல்பனா தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, 26வது வார்டு மாநகராட்சி பள்ளியில் கழிப்பிடம் கட்டுவதற்கு 16 லட்சம் மதிப்பீட்டில் கொடுக்கப்பட்ட திட்டத்தில் கையெழுத்திட்டார்.