வணிகர்களைக் காப்பாற்றும் வகையில் சிறிய பெரிய நிறுவனங்களுக்கு ஒரே விலைப் பட்டியலை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்க மாநில தலைவர் விக்ரம ராஜா தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை இரயில் நிலையம் அருகே வணிகர்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு வணிகர்கள் சங்க மாநில தலைவர் விக்ரமராஜா, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்பொழுது அவர் கூறியதாவது, தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பாக, 39-வது வணிகர் தின மாநில மாநாடு, திருச்சியில் நடைபெற உள்ளது. இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள இருப்பதாகவும், இந்த மாநாட்டில் கடல் போன்று மக்கள் கூட வேண்டும் என்று அனைத்து மாவட்ட, மற்றும் மண்டலங்களில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, ஆட்களை அங்கு வரவழைக்கத் திட்டமிட்டு இருப்பதாகவும், இதன் ஒரு பகுதியாக இதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று கோவையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் வாயிலாக, நடைபெற உள்ள மாநாட்டில் 15-ஆயிரம் வணிகர்களை ஒன்று திரட்டி மாபெரும் மாநாடாக நடத்த, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த மாநாட்டின் வாயிலாகக் கலந்து கொள்ளும் தமிழக முதல்வரிடத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து, இறந்து போன வணிகர்களுக்கு தலா நபர் ஒன்றுக்கு மத்திய அரசிடம் 10-லட்சம் இழப்பீடு கேட்டுள்ளதாகத் தெரிவித்த அவர் வணிகர்களை ஒன்றுபடுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
மேலும், பெரிய நிறுவனங்களால் சிறிய வியாபாரிகளின் தொழில்கள் நலிவடைந்து உள்ளதாகவும், இதனால் சிறிய பெரிய நிறுவனங்களுக்கு ஒரே விலையைத் தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.