கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா மாமன்ற உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
கோவை: கோவை விக்டோரியா ஹாலில் மாமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
10 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்வு துவங்கியது. நடைபெறும் இந்த மாமன்ற உறுப்பினர்களுக்கான பதவி ஏற்பு வரலாற்றுச் சிறப்புமிக்க விக்டோரியா ஹாலில் நடைபெற்று வருகின்றது.
கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். உயர்நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்டது என்ற நிபந்தனையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்று வருகின்றனர்.
1892ம் ஆண்டு கட்டப்பட்ட நூற்றாண்டு பழமை வாய்ந்த விக்டோரியா ஹால் அரங்கில் உறுப்பினர்கள் பதவியேற்று வருகின்றனர். தற்போது வரை, 22 வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்.
5 வது வார்டு உறுப்பினர் நவீன்குமார், தனது தந்தை தாயாரின் பெயரைக்கூறி, கடவுளின் பெயரால் பொறுப்பேற்றுக் கொண்டார். 7வது வார்டு உறுப்பினர் கோவிந்தராஜ் தளபதி பெயரால் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
இதையடுத்து, 15 வது வார்டு காங்கிரஸ் உறுப்பினர் சாந்தாமணி பச்சமுத்து அன்னை இந்திரா பெயரால் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். 18வது வார்டு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தீரன் சின்னமலை, ஈசன் பெயரால் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
மேலும், 20வது வார்டு திமுக உறுப்பினர் மரியராஜ் கலைஞர், தளபதி ஆகியோரை வணங்கி எனக்கூறி உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.