"தமிழக முதல்வர் தளபதியாரின் நானிலம் போற்றும் நல்லாட்சிக்கு அடித்தளம் அண்ணாவின் கனிவே, கலைஞரின் துணிவே" என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
கோவை: கோவையில் தமிழக முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு ஐ. லியோனி தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பல்வேறு இடங்களில் திமுகவினர் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவை தெப்பக்குளம் பகுதியில் பட்டிமன்றம் நடைபெற்றது.
"தமிழக முதல்வர் தளபதியாரின் நானிலம் போற்றும் நல்லாட்சிக்கு அடித்தளம் அண்ணாவின் கனிவே, கலைஞரின் துணிவே" என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
இதில் திமுக கழக கொள்கை பரப்பு செயலாளர் ஐ.லியோனி நடுவராக இருக்க அண்ணாவின் கனிவே என நெல்லை ஜெயந்தா மற்றும் மதுரை சங்கரும் கலைஞரின் துணிவே என கோவை தனபால் மற்றும் நாகநந்தினி ஆகியோரும் பட்டிமன்றத்தில் உரையாற்றினர்.
பட்டிமன்ற தலைமை உரையாற்றிய அமைச்சர் செந்தில் பாலாஜி, நடந்து முடிந்த தேர்தலில் திமுகவிற்கு மகத்தான வெற்றியைத் தந்த வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், கோவை மாவட்ட வளர்ச்சிக்கு முழுமையாக செயல்படுவோம் என தெரிவித்தார்.
முதலமைச்சரின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக கோவை அரசு மருத்துவமனையில் இன்று பிறக்கின்ற குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் தரும் நிகழ்ச்சி சில தினங்களில் நடைபெற உள்ளதாகவும், 6ம் தேதி கோவை மாவட்டத்தின் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என 152 இடங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் தந்துள்ளதாகவும் கூறினார்.
மேலும், கோவை மாநகராட்சியில் 2 தினங்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்ய சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
மேலும், முதலமைச்சரிடத்தில் கோவைக்கு என தனி இடம் உள்ளதாகவும் கோவையில் சாலைகளை சீரமைக்க 200 கோடி, தெரு விளக்குகளுக்கு 70 கோடி ரூபாய் நிதியை வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.
பட்டிமன்றம் துவங்கும் முன் பட்டிமன்ற பேச்சாளர்களுக்கு அமைச்சர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.