மேலும், கோவை சாய்பாபாகாலனி காவல்நிலையத்தில் கடந்த 17ம் தேதி புகார் அளித்தும் காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறினார்.
கோவை: கோவையில் ரூ.2.5 கோடி மதிப்பிலான சொத்தை திமுகவினர் அபகரிக்க முயற்சிப்பதாக மாநகர காவல் ஆணையரிடம் பெண் புகார் மனு அளித்துள்ளார்.
கோவை தென்னமநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் திலகவதி. இவர் தனது சொத்தினை திமுக கட்சியைச் சேர்ந்தவர்கள் அபகரிக்க முயல்வதாகவும், அவர்களிடமிருந்து தனது சொத்தினை மீட்டுத் தருமாறும், கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
இது குறித்து அவர் புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவை சாய்பாபா காலணி பகுதியில் சுமார் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான தனது சொத்தின் (வீடு) பேரில் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் மூலமாக 2020ம் ஆண்டு பெருந்துறையைச் சேர்ந்த ஆடிட்டர் மாணிக்கம் என்பவரிடம் 11 லட்ச ரூபாயை அடமானம் கடனாக பெற்றதாகவும், மூன்று மாதம் கழித்து அதனை வட்டியுடன் திருப்பி செலுத்த சென்ற போது 11 லட்சத்திற்கு பதில் 50 லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் சொத்து பத்திரங்களை திருப்பி தருவதாக தெரிவித்தார்.
இதனையடுத்து, முறையாக நான் பெற்ற தொகையை தந்து விடுகிறேன் எனது சொத்து பத்திரங்களை திருப்பித் தாருங்கள் என கூறிய போதும், சுரேஷ், ஆடிட்டர் மாணிக்கம் மற்றும் திமுக கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மகுடபதி, சிவகுமார் ஆகியோர் தன்னை மிரட்டி தனது வீட்டினை பூட்டி வைத்து விட்டு 50 லட்சம் தருமாறு மிரட்டுவதாக தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பாக அவர்களை அணுகினால் சுரேஷ், மகுடபதி, சிவக்குமார் ஆகியோர் நாங்கள் திமுகவை சேர்ந்தவர்கள். எங்கள் மீது உன்னால் எங்கு போனாலும் நடவடிக்கை எடுக்க முடியாது என மிரட்டி தாக்குவதாகவும் தெரிவித்தார்.
மேலும், கோவை சாய்பாபாகாலனி காவல்நிலையத்தில் கடந்த 17ம் தேதி புகார் அளித்தும் காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறினார்.