அந்த பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் கடை வரும் இடத்திற்கு முன்பு நின்று ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: கோவை தாளியூரில் புதியதாக வரவுள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னிமடை ஊராட்சி தாளியூரில் பகுதியில் புதியதாக டாஸ்மாக் கடை வருகிறது என்ற தகவலையடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் கடை வரும் இடத்திற்கு முன்பு நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதனையடுத்து, இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தடாகம் போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசினர்.
அதற்குள் பொதுமக்கள் அங்கு உட்கார்ந்துகொண்டு டாஸ்மாக் கடை இங்கு வரக்கூடாது என்று கோஷங்களை எழுப்பினர்.
இதனைத்தொடர்ந்து அவர்கள் கூறும்போது, இங்கு அதிக தோட்ட பகுதியுள்ளது. மேலும் பெண்கள், குழந்தைகள் என பலரும் இந்த வழியாக செல்கின்றனர். இந்த பகுதியில் டாஸ்மாக் கடை வந்தால் பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்படும். ஊராட்சியில் டாஸ்மாக் கடை வரக்கூடாது என ஏற்கனவே தீர்மானம் போடப்பட்டுள்ளது.
மேலும், கிராம சபா கூட்டத்திலும் டாஸ்மாக் கடை வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் இங்கு டாஸ்மாக் வந்தால் நாங்கள் சாலைமறியல் தான் செய்ய வேண்டும் என்று கூறினர்.
இதனையடுத்து போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசி டாஸ்மாக் இங்கு வராது. மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் டாஸ்மாக் மண்டல மேலாளரிடம் புகார் அளிக்க வேண்டும். ஆர்ப்பாட்டம் செய்யக் கூடாது என்று கூறியதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் இங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.