நிர்மலா சீதாராமன் தலைமையிலான பட்ஜெட்டிற்கு பிந்தைய பட்ஜெட் குறித்த கலந்துரையாடல் கூட்டத்தில் காட்மா சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
கோவை: காட்மா சங்கத்தின் சார்பில் நிர்மலா சீதாராமனிடம் GST குறித்த குறுந்தொழில் முனைவோர்கள் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையிலான பட்ஜெட்டிற்கு பிந்தைய பட்ஜெட் குறித்த கலந்துரையாடல் கூட்டம் இன்று (28.02.2022) திங்கட்கிழமை சென்னையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காட்மா சங்கத்தின் சார்பில் இணை தலைவர் ஜெ.மகேஸ்வரன், துணைத் தலைவர் ஜெ.புவியரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கோவை குறுந்தொழில் முனைவோர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனு மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் அவர்களிடம் நமது சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது.
கோரிக்கைகள் விபரம்:-
மத்திய அரசால் விதிக்கப்பட்டுள்ள GST வரியில், லேபர் சார்ஜ் அடிப்படையில் ஜாப் ஒர்க்கில் ஈடுபடும் தொழில் முனைவோருக்கான GST வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படவும், தாமதமாக GST வரி செலுத்தும் தொழில் முனைவோர்களுக்கு தற்போது விதிக்கப்படும் அபராதத் தொகை அதிகமாக இருப்பதால், அது முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும்.
தற்போது GST கவுன்சிலால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஒரு பொருளை விற்பனை செய்த விற்பனையாளர் பிரதி மாதம் 11ம் தேதிக்குள் தங்களது GST கணக்கை தாக்கல் செய்யாவிட்டால், பொருளை வாங்கிய வாடிக்கையாளர் அவர் செலுத்திய வரியை உள்ளீட்டு வரியாக எடுக்க இயலாது என்ற GST விதிமுறை வாபஸ் பெறப்பட வேண்டும்.
தொழில் முனைவோர்கள் GST வரி செலுத்தாமல் ஏமாற்ற வேண்டும் என்று நினைப்பதில்லை. ஆனால், நடைமுறையில், ஒரு குறுந்தொழில் முனைவோர் தாம் செய்யும் வேலைக்கு பில் போடும் பொழுது அதற்கு உண்டான பேமெண்டை தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறுவதற்க்கு 90 முதல் 180 நாட்கள் வரை கால தாமதம் ஆகிறது. ஆனால் அந்த பில்களுக்கான GST வரியை பிரதி மாதம் 20ம் தேதிக்குள் தொழில் முனைவோர் செலுத்த வேண்டியிருக்கிறது.
வாடிக்கையாளரிடம் இருந்து பேமெண்ட் கிடைப்பதற்கு காலதாமதம் ஆனாலும் கூட தொழில் முனைவோர் அதற்கான GST வரியை செலுத்தி விட வேண்டி இருப்பதால், அதற்காக கந்துவட்டி மற்றும் தனியார் நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்க வேண்டியுள்ளது. அவ்வாறு பெறப்பட்ட கடன்களுக்கான தவணைகள் மற்றும் வட்டியையும் கூடுதலாக ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டியிருப்பதால் தொழில் முனைவோர் தங்களது தொழிலிற்கு செய்ய வேண்டிய முதலீடு வெகுவாக குறைந்து விடுகிறது. எனவே GST வரி செலுத்த தயாராக இருக்கும் தொழில் முனைவோர்களுக்கு எவ்விதமான வட்டியோ அல்லது அபராதமோ இன்றி, அவர்களது GST நிலுவை தொகையை மட்டும் செலுத்திக் கொண்டு தொழில் முனைவோர்கள் தங்கள் தொழிலை மீண்டும் தொடர அனுமதித்தால் பாதிக்கப்பட்டிருக்கும் தொழில் முனைவோர் மீண்டும் தங்களது தொழிலை தொடர்வதற்கு பேருதவியாக இருக்கும். இதன் மூலம் நாட்டின் வரி வருவாயும் அதிகமாகும், உள்நாட்டு உற்பத்தியும் அதிகரிக்கும். மேலும் வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும்.
சில பொருட்களை உற்பத்தி செய்யும் பொழுது அதற்கான மூலப்பொருட்களுக்கு GST வரி விகிதம் அதிகமாகவும், உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்யும் பொழுது அதற்கான GST வரி விகிதம் குறைவாகவும் உள்ளது, இதுவும் தொழில் முனைவோர்களுக்கு மிகுந்த நெருக்கடியை அளிப்பதாக உள்ளது.
GST ரிட்டர்ன் தாக்கல் செய்யாமலோ அல்லது GST செலுத்தாமலோ இருக்கும் ஒரு தொழில் முனைவோர், தங்களது GST கணக்கு முடக்கபட்ட 30 நாட்களுக்குள் முழு GST நிலுவை தொகையை வட்டியுடன் செலுத்தாவிடில், தீர்ப்பாயத்தில் முழு வரி நிலுவையை, உள்ளீட்டு வரியை கழிக்காமல், வட்டி மற்றும் அலுவலர்கள் நிர்ணயிக்கும் அபராதம் ஆகியவற்றையும் சேர்த்து முழுவதும் செலுத்திய பிறகு, செலுத்திய ஆவணத்துடன் மேல் முறையீடு செய்து, தீர்ப்பு கிடைக்கப்பெற்ற பின்புதான் தங்கள் GST கணக்கை புதுப்பித்து, தொடர்ந்து தங்கள் தொழிலை செய்ய முடிகிறது. இவ்வாறு செய்வதற்கு குறைந்தது மூன்று மாதங்கள் வரை ஆகிவிடுகிறது.
GST மாதாந்திர கணக்கு தாக்கல் செய்யாத ஒரு GST கணக்கு எண் அதிகாரிகளால் முடக்கப்படுகின்றன. ஆனால், அதையே GST கணக்கு எண்ணை, வரி முழுவதும் செலுத்தி திரும்பவும் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு முறையீடு செய்தால் மட்டுமே நடைமுறைக்கு வருவதால் கால தாமதத்திற்கு வழிவகுத்து தொழில் முனைவோர்களுக்கு நெருக்கடியை உண்டாக்குகிறது.
ஒரு குறுந்தொழில் முனைவோர் தனது வாடிக்கையாளரிடம் இருந்து E way பில்கள் மூலம் பொருட்களை பெற்று, ஜாப் ஒர்க் அடிப்படையில் அதை உருமாற்றி, மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு திருப்பி அனுப்பும் பொழுது, வாடிக்கையாளரிடம் இருந்து பெற்ற E way பில்களையே உபயோகப்படுத்தி பொருட்களை திருப்பி அனுப்பிக்கொள்ள உதவ வேண்டும், ஒரு லேத், 2 லேத் வைத்திருக்கும், கம்ப்யூட்டர் மற்றும் E way பில்கள் பற்றிய புரிதல் இல்லாத தொழில் முனைவோர்களுக்கு இது பேருதவியாக இருக்கும்.
ஒரு தொழில் முனைவோர் தங்களது கணக்குகளை தாக்கல் செய்து, ஆன்லைன் ரிடர்ன் தாக்கல் செய்த பிறகு அதில் ஏதாவது தவறு இருக்கும் பட்சத்தில், அந்தக் கணக்கில் உள்ள தவறினை மறு மாதம் மட்டுமே சரி செய்ய முடியும் என்பதை தளர்த்தி, உடனடியாக சரி செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட வேண்டும் ஆகிய குறுந்தொழில் முனைவோர்களின் கோரிக்கைகளை மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் ஆகிய தாங்கள் தாய் உள்ளத்துடன் கருத்தில் கொண்டு பரிசீலித்து, நிறைவேற்றித்தந்து உதவி தொழிலையும், தொழில் முனைவோர்களையும் காப்பாற்றி உதவுமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.