எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு ஆண்டில் பருத்தியின் விலை 62 சதவீதம் உயர்ந்து ஒரு கிலோ 135 ரூபாயிலிருந்து 219 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்.
கோவை: கோவையில் கடந்த ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவித்த பருத்தியின் மீதான 11% இறக்குமதி வரி நாட்டில் பருத்தி சந்தை நிலையை மோசமாக்கியுள்ளதாக தென் இந்திய பஞ்சாலைகள் கழகம் தெரிவித்துள்ளது.
பருத்தி பற்றாக்குறை குறித்து தென் இந்திய பஞ்சாலைகள் கழகத் தலைவர் ரவி சாம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
பருத்தி உச்சபட்ச விலையில் உள்ளதாகவும், பருத்தியின் தரமும் மிகக் குறைவாக உள்ளதாகக் கூறினார். ஆந்திராவில் பல ஆலைகள் பணியை நிறுத்தியுள்ள நிலையில் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு ஆண்டில் பருத்தியின் விலை 62% உயர்ந்து ஒரு கிலோ 135 ரூபாயிலிருந்து 219 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
40 லட்சம் பேல்கள் பருத்தியை வரியில்லாமல் இறக்குமதி செய்ய அனுமதித்து வேலை வாய்ப்பு இழப்பைத் தவிர்க்க வேண்டும் என்றும், நேரடியாக பருத்தி ஆலைகளுக்கு வந்து சேர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும், ஏற்றுமதியாளர்கள் ஏற்கனவே ஒப்பந்தம் செய்து கொண்ட ஆர்டர்களை நிறைவேற்றுவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவித்த பருத்தியின் மீதான 11% இறக்குமதி வரி நாட்டில் பருத்தி சந்தை நிலையை மோசமாக்கியுள்ளதாக கூறினார்.
விதையுடன் கூடிய பருத்தியின் விலை குறைந்தபட்ச ஆதரவு விலையை விட 70% அதிகமாக இருப்பதால் விவசாயிகள், ஜின்னர்கள் மற்றும் வியாபாரிகள், மேலும் விலை உயரும் நம்பிக்கையில் பருத்தியை பதுக்கி வைத்துள்ளனர் எனவும், MCX மற்றும் NCDEX போன்ற தளங்களை பயன்படுத்தி சில பருத்தி வர்த்தகர்கள் செயற்கையான பற்றாக்குறையை உருவாக்கி அதன் மூலம் ஊக வணிகத்தில் ஈடுபடுகின்றனர் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
பருத்தி சீசன் இல்லாத காலத்திலும் தொழிலாளர்கள் வேலை இழப்பைத் தடுக்க பிரதமர் பருத்தி கொள்கையில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், 15 ஆண்டுகளாக நீடித்த மந்தநிலை காரணமாக நூற்புத் திறனில் 35% க்கும் மேலான நூற்பாலைகள் நவீனப்படுத்திக் கொள்ள முடியாத காரணத்தால் ஏற்கனவே ஜவுளி அமைச்சகம் பரிந்துரைத்தபடி பருத்தி தொழில்நுட்ப பணி 2.0 வை நடைமுறைப்படுத்துமாறு பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதன் மூலம் தொழில்நுட்ப மேம்பாடு, தொழில்நுட்ப பறிமாற்றம், சுத்தமான பருத்தி, ஜவுளி தயாரிப்புகளை ஊக்குவித்தல் போன்றவற்றை செய்ய முடியும் எனவும் 2.0 மூலம் விவசாயிகளும், தொழில்துறையும் பயன்பெற்று 20 மில்லியன் புதிய வேலை வாய்ப்புகள் ஜவுளித்துறையில் உருவாக வாய்ப்புள்ளதாகவும், இதன் மூலம் இந்திய ஜவுளித்துறையின் மதிப்பான 162 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 350 அமெரிக்க டாலர் சந்தை மதிப்பை அடையும் எனவும் தெரிவித்தார்.