வனத்துறையினர் 100-ரூபாய் வசூலிப்பதைக் கண்டித்து இந்து முன்னணியினர் போளுவாம்பட்டி வனச்சரக அலுவலகம் அருகில் உள்ள இருட்டு பள்ளம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கையிலிருந்த திரிசூலம் ஏந்தியும் பதாகைகளை ஏந்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
கோவை: வெள்ளியங்கிரி கோவிலுக்குச் செல்ல வனத்துறையினர் 100-ரூபாய் வசூலித்ததைக் கண்டித்து இந்து முன்னணியினர் திரிசூலத்துடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்கைலாயம் என போற்றப்படும் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மாநிலங்களிலிருந்தும் பல பக்தர்கள் செல்வது வழக்கம். ஆண்டுதோறும் மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, சித்திரை-1 ஆகிய நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் மலை ஏறுவர், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் முதல், மே மாதம் வரை 4 மாதங்கள் மட்டுமே பக்தர்கள் வெள்ளிங்கிரி மலைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் கொரோனா காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பக்தர்கள் மலை ஏற வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். இதனையடுத்து, இரண்டு நாட்கள் மகாசிவராத்திரி வருவதால் ஏராளமான பக்தர்கள் வெள்ளிங்கிரி மலைக்கு வருகை புரிந்து வருகின்றனர். இதனையொட்டி அங்கு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.
பாதுகாப்புப் பணியில் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வெள்ளிங்கிரி மலை ஏற வரும் பக்தர்களுக்கு இன்னும் முறையாக அனுமதி அளிக்கப்படவில்லை ஆனாலும் மலையேறும் பக்தர்களிடம் வனத்துறையினர் சார்பாக ரூபாய் 100-கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இந்த கட்டணத்திற்கு முறையான ரசீது கொடுப்பது இல்லை பக்தர்கள் குற்றச்சாடி வந்தனர்.
இந்நிலையில் வனத்துறையினர் 100 ரூபாய் வசூலிப்பதைக் கண்டித்து இந்து முன்னணியினர் போளுவாம்பட்டி வனச்சரக அலுவலகம் அருகில் உள்ள இருட்டு பள்ளம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கையிலிருந்த திரிசூலம் ஏந்தியும் பதாகைகளை ஏந்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 100 ரூபாய் வசூலிக்கப்படுவதைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும் இதுவரை வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல வசூல் செய்யப்படாத இம்முறை வசூலிப்பதற்கான காரணங்கள் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ள அவர்கள் வனத்துறையினர் முறையான விளக்கம் அளிப்பதில்லை எனவும் கட்டணம் கட்டியதற்கான ரசீதும் வழங்குவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தின் இடையே காவல்துறை வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து வனத்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இது போன்று இனி நடைபெறாது என உறுதியளித்ததைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டமானது கைவிடப்பட்டது. மேலும் இது போன்று நடைபெறாமல் இருக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.