வெயில் அதிகரிக்கும் போது குப்பைகளில் மீதேன் உருவாகி தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதனைத் தவிர்க்கும் பொருட்டுக் குப்பைகளுக்கிடையே மீதேன் மற்றும் வெப்ப அளவு போன்றவற்றைத் தெரிந்து கொள்ளும் வகையில் தொழில்நுட்ப உதவியுடன் விரைவில் சென்சார்கள் வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை: வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீ விபத்தை தவிர்க்க குப்பைகளுக்கிடையே சென்சார்கள் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை வெள்ளலூர் பேரூராட்சிக்குட்பட்ட செட்டிபாளையம் சாலையில் மாநகராட்சிக்குச் சொந்தமான 650-ஏக்கர் பரப்பளவிலான குப்பைக்கிடங்கு உள்ளது. கோவை மாநகரில் உள்ள 100-வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் இந்த கிடங்கில் கொட்டப்படுகிறது.
அளவுக்கு அதிகமான குப்பைகள் சேகரமாகும் நிலையில், இங்கு அவ்வப்போது தீ விபத்து ஏற்படுகிறது. குப்பைகள் ஒரே பகுதியில் சேகரிக்கப்படுவதால், தீ மளமளவெனப் பரவி, கரும் புகை மூட்டம் ஏற்படுகிறது. இதனால், சுற்றுவட்டாரப்பகுதிகளில் வசிக்கும் சுமார் 50-ஆயிரம் மக்கள் மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு கடும் அவதியடைந்து வருகின்றனர்.
குப்பையை அகற்ற ரூ.60-கோடி செலவில் பயோ-மைனிங் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தினமும் 2-ஆயிரம் முதல் 2-ஆயிரத்து 500-கனமீட்டர் குப்பை தரம் பிரித்து அழிக்கப்படுகிறது என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்படாமல் இருக்கக் குப்பைகளுக்கிடையே சென்சார்கள் வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘வெயில் அதிகரிக்கும் போது வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் உள்ள குப்பைகளில் மீதேன் உருவாகி தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதனைத் தவிர்க்கும் பொருட்டுக் குப்பைகளுக்கிடையே மீதேன் மற்றும் வெப்ப அளவு போன்றவற்றைத் தெரிந்து கொள்ளும் வகையில் தொழில்நுட்ப உதவியுடன் விரைவில் சென்சார்கள் வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது,’’ என்றார்.