அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாததால், மக்கள் வாக்களிக்கவில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும், அதிமுக வேட்பாளர் டெபாசிட் இழந்ததற்கு உள்கட்சி பூசல்கள் முக்கிய காரணம் என்கின்றனர் அதிமுக வேட்பாளரின் ஆதரவாளர்கள்.
கோவை: நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், கோவை மாவட்டத்தில் மாநகராட்சியின் 100 வார்டுகளில், 96 வார்டுகளை கைப்பற்றி, திமுக மகத்தான வெற்றி பெற்றது. இந்த நிலையில், வெறும் 3 வார்டுகளில் மட்டுமே அதிமுக பெற்றது அக்கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் 25 ஆண்டுகளுக்கு பிறகு சேரன்மாநகர் உள்ளடக்கிய மாநகராட்சி 22-வது வார்டு பகுதியை திமுக கைப்பற்றியுள்ளது என்பது அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சேரன் மாநகர் பகுதியில் உள்ள அடிப்படை பிரச்சனைகள், மோசமான ரோடு, சுகாதார சீர்கேடு உள்ளிட்டவை தான் அதிமுக கட்சியின் தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறது. அதை நிரூபிக்கும் விதமாக, நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சேரன்மாநகர் உள்ளடக்கிய 22-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சண்முகசுந்தரம் என்ற வேட்பாளர் தோல்வி அடைந்தது மட்டுமின்றி டெபாசிட் தொகையையும் இழந்துள்ளார்.
அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாததால், மக்கள் வாக்களிக்கவில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும், அதிமுக வேட்பாளர் டெபாசிட் இழந்ததற்கு உட்கட்சி பூசல்கள் முக்கிய காரணம் என்கின்றனர் அதிமுக வேட்பாளரின் ஆதரவாளர்கள்.
இதுகுறித்து அதிமுக கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:-
அதிமுகவை சேர்ந்த சண்முகசுந்தரம், கட்சியினர் மத்தியில் நன்கு அறிமுகமானவர். சிறந்த பண்பாளர். அவர் கட்சியை சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சண்முகசுந்தரம் அவர்களுக்கு ஓட்டு போட்டு இருந்தால் கூட அவர் டெபாசிட் தொகையை இழந்திருக்க மாட்டார்.
இத்தகைய வேட்பாளருக்கு, உறுதுணையாக பிரச்சாரத்தின் போது உடன் சென்ற சில அதிமுக கட்சி உறுப்பினர்களே நம்பிக்கை துரோகம் செய்துள்ளனர்.
கோவை மாநகராட்சி 22வது வார்டில் மொத்தம் 13,688 - வாக்காளர்கள் உள்ளனர். நடந்து முடிந்த தேர்தலில் மொத்தம் 7,299 வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சண்முகசுந்தரம் 1,157 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்துள்ளார்.
இந்த தேர்தலில் அதிமுக கட்சியினரே வேட்பாளர் சண்முகசுந்தரதுக்கு எதிராக செயல்பட்டுள்ளனர் என்பது தேர்தல் முடிவுகள் மூலம் தெளிவாகியுள்ளது. கட்சி மூத்த நிர்வாகிகள் இதுகுறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினால், மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்பதில் சந்தேகமில்லை.
கட்சித் தலைமை அறிவிக்கும் வேட்பாளருக்கு களப்பணி செய்து வேட்பாளர் வெற்றி பெற உதவி செய்வதுடன், கட்சி கொள்கைகள் கோட்பாடுகள் குறித்து மக்கள் மத்தியில் சிறப்பான முறையில் கொண்டு செல்வதே, கட்சி உறுப்பினர்களின் தலையாய கடமையாகும்.
அதை விடுத்து, தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படாத அதிர்ச்சி மற்றும் தங்களுக்குள் இருக்கும் விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுத்து, நம்பிக்கை துரோகம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், கோவை 22-வது வார்டில் போட்டியிட்ட வேட்பாளருக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் மீது கட்சி நிர்வாகிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பதே அதிமுக கட்சி மீது விசுவாசமுள்ள உறுப்பினர்களின் எதிர்பார்ப்பாகும்.
இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.