கோவை காளப்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்று வரும் திமுகவின் செயற்குழு கூட்டத்தின் மேடையில் மீனா ஜெயக்குமார் கேள்வியால் பெரும் சர்ச்சை.
கோவை: எல்லோரும் மனிதர்கள் தான்.
உங்கள் மனைவிக்கு வாய்ப்பு கிடைக்க என் வாய்ப்பை தடுப்பதா? என்று உள்ளாட்சி தேர்தலில் சீட் மறுக்கப்பட்ட திமுக மகளிரணி துணை செயலாளர் மீனா ஜெயக்குமார், கோவையில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் கேள்வி எழுப்பிய சம்பவம், திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவின் மாமன்ற, நகர்மன்ற மற்றும் பேரூராட்சி உறுப்பினர்களுடனான செயற்குழு கூட்டம், காளப்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று காலை துவங்கியது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மேயர் வேட்பாளர்களுக்கான விருப்ப மனுகள் பெறப்பட்டது.
அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக, மேடையில் திமுக மகளிரணி துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் தனக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்தும் அதற்கு காரணமாக இருந்த கட்சி நிர்வாகிகள் குறித்தும் மேடையில் சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
திமுக மேயர் வேட்பாளராக நிவேதா சேனாதிபதி, இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் ஆகிய இருவருக்கும் வாய்ப்பு உள்ளது என்று திமுக கட்சி வட்டாரங்கள் பேசி வரும் சூழலில், தேர்தலுக்கு முன்பே மீனா ஜெயகுமார் தான் திமுக மேயர் வேட்பாளர் என்று பெரிய அளவில் பேசப்பட்டு வந்த நிலையில், யாருமே எதிர்பார்க்காத படி, இறுதியில் அவருக்கு கவுன்சிலர் சீட் கூட வழங்கப்படவில்லை, என்பது மீனா ஜெயகுமார் ஆதரவாளர்களின் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இன்று நடந்து கொண்டிருந்த உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் 'எல்லோரும் மனிதர்கள் தான். உங்கள் மனைவிக்கு வாய்ப்பு கிடைக்க என் வாய்ப்பை தடுப்பதா? என மேடையில் மீனா ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.
மேலும், நானும் ஒரு பெண் தான். எனக்கும் வலிக்கும். அவர்கள் குடும்பத்தாருக்கு பதவி கிடைக்க, என் பெயரை களங்கப்படுத்தும் விதமாக அவதூறு பரப்பி வருகிறார்கள், என்று தன் ஆதங்கத்தை மேடையில் கொட்டித் தீர்த்தார்.
அவர் பேசியதற்கு, கூட்டத்தில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பிய நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி குறுக்கிட்டு, பொது வெளியில் குற்றம் சாட்டுவதை தவிர்த்து, குற்றச்சாட்டுக்களை மனுவாக தரும்படி அவரிடம் எடுத்துரைத்தார், அதன் பின், மீனா ஜெயகுமார் மேடையிலிருந்து கீழே இறங்கினார்.
திமுக செயற்குழு கூட்ட மேடையில், கட்சி மாவட்ட பொறுப்பாளர் தன் வாய்ப்பை பறித்தார் என்ற பகிரங்க குற்றச்சாட்டை மகளிரணிநிர்வாகி ஒருவர் வெளிப்படையாக பேசியது, திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.