வடவள்ளி அடுத்த வீரகேரளம் பகுதியிலுள்ள, கே.ஆர்.கே நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில், ஒரு நபர் தெரு நாயை கட்டையால் அடித்து கொன்ற சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் வலுத்து வருகிறது.
கோவை: கோவை வடவள்ளி அருகே தெரு நாயை கொன்று ரோட்டில் இழுத்துச் சென்ற நபரின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை, வடவள்ளி அடுத்த, வீரகேரளம் பகுதியிலுள்ள, கே.ஆர்.கே நகரில் பல்வேறு குடியிருப்பு வாசிகள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள தெரு நாய்களுக்கு அந்த பகுதியில் குடியிருப்பவர்கள் பலரும், உணவு அளித்து வருவதை வாடிக்கை கொண்டிருந்தனர்.
இரவு நேரங்களில் இப்பகுதிக்கு வெளியாட்கள் வந்தால், அங்குள்ள நாய்கள் அவர்களை கண்டு குறைப்பதும், துரத்துவதால், அந்த தெருவுக்கு வெளியாட்கள் இரவு நேரங்களில் வர தயக்கம் காட்டி வந்துள்ளனர்.
இந்த நிலையில், அதே பகுதியில் வசிக்கின்ற, பாலு என்பவர், அந்த பகுதியில் சமீபத்தில் குட்டி போட்டிருந்த ஒரு நாயை கொடூரமாக கட்டையால் தாக்கி கொன்று அந்தப் பகுதி வீதிகளில் இழுத்துச் சென்றுள்ளார்.
இதனை கண்ட அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள், மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர்.
மேலும், இந்த கொடூர செயலை செய்த நபருக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும் என்றும், நாய்களால் நமக்கு ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால் அதனை முறையாக காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டுமே தவிர, இது போன்று கொடூர செயலை யாரும் செய்யக்கூடாது என்று தெரிவிக்கும் விலங்குகள் நல ஆர்வலர்கள் அந்த நபர் மீது உரிய சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.