சென்னை தலைமை செயலகத்தில் தமிழக பட்ஜெட் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தற்போதைய நிலையையும், தேவைகளையும் கொடிசியா தலைவர் எம்.வி.ரமேஷ் பாபு எடுத்துரைத்தார்.
சென்னை: தமிழக பட்ஜெட் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தற்போதைய நிலையையும், தேவைகளையும் கொடிசியா தலைவர் எம்.வி.ரமேஷ் பாபு எடுத்துரைத்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்ட தமிழக பட்ஜெட் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதில் கொடிசியாவின் தலைவர் கலந்து கொண்டு, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தற்போதைய நிலையையும், தேவைகளையும் எடுத்துரைத்தார்.
அப்போது கொடிசியா தலைவர் எம்.வி.ரமேஷ் பாபு கீழ்க்காணும் கோரிக்கைகளைத் தமிழக நிதி அமைச்சரிடம் அளித்தார்:
கோவையின் தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளைக் கருத்தில் கொண்டு திருத்தப்பட்ட கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் வெளியீடு விரைவுபடுத்தப்பட வேண்டும்.
சென்னையில் உள்ள சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தைப் போல, கோவையிலும் ஒரு மேம்பாட்டு ஆணையம் அமைக்கப்படுவதன் மூலம் கோயம்புத்தூர் நகரம் விரைவில் வளர்ச்சி பெறும்.
அனைத்து சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கவும் தங்கள் உற்பத்தியைப் பெருக்கவும் 6% வரை Interest Subvention Charge க்கான உதவித்தொகை நீட்டிக்கப்பட வேண்டும்.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் (TIIC) மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் எவ்வித பிணையும் இன்றி கடன் உதவி வழங்க வேண்டும்.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிப்பதற்காகச் சிறப்புத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
அரசின் கடன் மானியம் பெறுவதற்கு ஐஎஸ்ஓ சான்றிதழ் வேண்டி நிபந்தனை விதிக்கக் கூடாது.
எம்ஓடி (MoD) கட்டணங்கள் மீண்டும் 5,000 ரூபாய் நிலையாக இருக்கும்படி செய்யவேண்டும்.
அனைத்து சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கும் சிஜிடிஎம்எஸ்இ (CGTMSE) திட்டத்தின் கீழ் கடன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குக் கடன் பெறும் பொழுது அதற்கான தகுதிகள் கார்ப்பொரேட் நிறுவனங்களைப் போல் இல்லாமல் தனி விதிகள் வகுக்கப்பட வேண்டும். கடன் பெறுவதற்கு 10% மார்ஜின் தொகை என்று உறுதி செய்ய வேண்டும். கடன் வழங்கு நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும்.
சூழல் சார்ந்து செய்யப்படும் நிறுவனங்களின் முதலீடுகளுக்கு மானியம் வழங்கப்பட வேண்டும்.
ஜிஎஸ்டி:
தமிழக அரசாங்கம் பெட்ரோலியப் பொருட்களையும் ஐிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப் பரிந்துரை செய்ய வேண்டும்.
தமிழக அரசு ஐிஎஸ்டி வரம்புகளை 5%, 10% மற்றும் 15% என்று இருக்குமாறு ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும்.
பில் டிரேடிங் முறையில் ஏற்படும் குற்றங்களைக் குண்டர் சட்டம் 1982ன் கீழ் கொண்டுவர உள்ள திட்டத்தைக் கைவிட வேண்டும்.
தொழிற்சாலைகளுக்கான கட்டுமானப் பொருட்கள் உள்ளீட்டு கடன் அனுமதிக்கப்பட வேண்டும்.
வாட் முறை மற்றும் நுழைவு வரி தொடர்பாகச் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கும் நடைமுறை நிறுத்தப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் விற்பனை வரித்துறை சி பார்ம் கேட்பது கைவிடப்பட வேண்டும். தொழிற்சாலைகளின் உறுதி சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
மின்னணு மற்றும் ஐவுளி துறை சார்ந்த பொருட்கள் உற்பத்திக்கென்று ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம் கோவையில் அமைக்கப்பட வேண்டும். இதன் மூலம் இப்பகுதியில் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் பெருகுவதோடு அன்னிய செலாவணியும் கிடைக்கும்.
பொதுத் துறை, தனியார் துறை இணைந்து உருவாக்கும் தொழிற்பூங்காக்கள் ௯லூர், அன்னூர் மற்றும் அவிநாசியில் அமைக்கப்பட வேண்டும்.
கோயம்புத்தூர் - கருர், கோயம்புத்தூர் - மதுரை, கோயம்புத்தூர் - ஓசூர் விரைவு நெடுஞ்சாலை உருவாக்கப்பட வேண்டும்.
இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தொழில் வழித்தடத்தில் தமிழகமும் இருப்பதால், பெரும் தொழில் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி தொழிற்சாலைகளைக் கோவையில் அமைப்பதால் பாதுகாப்புத் துறை சார்ந்த தொழில் உற்பத்தி இங்கு வளர்ச்சி பெறும்.
தேசிய மற்றும் தர நிர்ணய சான்றிதழ் பெறுவதற்கு உண்டான மானியம் உயர்த்தப்பட வேண்டும். மற்றும் சர்வதேச தரச் சான்றிதழ் பெறுவதற்கு ரூபாய் 5௦ லட்சம் வரை உயர்த்தப்பட வேண்டும்.
பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் ஒரு சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட வேண்டும்.
கோவையின் தேவையான மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில் சேவை உருவாக்கப்பட வேண்டும்.
சாலை போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் தற்போது உள்ள சாலைகள் மற்றும் பாலங்களின் விரிவாக்கப் பணிகளோடு, புதிய கட்டுமான பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும்.
கோவை விமான நிலைய விரிவாக்கப் பணியை விரைவுபடுத்துவதற்கு 350 கோடி ரூபாய் வழங்க வேண்டும்.
மாநில அரசு, சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் ஆன்லைன் மார்கெட்டிங் போர்டல் ஒன்றை உருவாக்க வேண்டும்.
சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும், எதிர்கால தொழில்நுட்பங்களைப் பெறுவதற்கும் ஏற்ப அரசு கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.
திறன் மேம்பாட்டுக்கு புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுவதோ, திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும்.
சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் இஆர்பி (ERP) செயல்பாட்டுக்கு மானியம் வழங்கப்பட வேண்டும்.
கோயம்புத்தூரை மின் வாகன மோட்டார் தயாரிப்பு மையமாக அறிவிக்க வேண்டும்.
சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படும் வகையில் மேற்சொன்ன தேவைகளைத் தகுந்த முறையில் நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.