கோவையில் நாளை 8-மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கபட உள்ள நிலையில், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வர அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவையில் நாளை 8-மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கபட உள்ள நிலையில், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வர அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது.
கோவை மாவட்டத்தில் இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களைப் பொறுத்தவரை மாநகராட்சிக்கு 1-மையம், 7-நகராட்சிகளுக்கு 7-மையங்கள், 33- பேரூராட்சிகளுக்கு 9-மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மாநகராட்சியில் 100-வார்டு உறுப்பினர்கள் நகராட்சியில் 198-வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சியில் 504-வார்டு உறுப்பினர்கள் (போட்டியின்றி தேர்வு பெற்றவர்களைத் தவிர்த்து) எண்ணிக்கை நடைபெறுகிறது. காலை 8- மணி முதல் வாக்கு எண்ணிக்கை துவங்குகிறது. இதற்காகக் கோவை மாவட்டத்தில் 497-வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்.
ஒவ்வொரு மையத்திற்கும் 3-நுண் பார்வையாளர்கள் வீதம் 150-நுண் பார்வையாளர் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், மாநகராட்சியில் 2400-காவலர்கள் நகராட்சி மற்றும் பேரூராட்சியைச் சேர்த்து 1460-காவலர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். இதைத்தவிர வாக்கு எண்ணிக்கை மையத்தில் சுற்றிலும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு வேட்பாளருடன் 3-முகவர்கள் அனுமதிக்கப்படுவர் அவர்கள் செல்போன் எடுத்து வர அனுமதி இல்லை. வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் வர அனுமதி இல்லை. மேலும் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து 5- கிலோ மீட்டர் சுற்றளவிற்கு மதுக்கடைகள் செயல்படவும் அனுமதி இல்லை.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் முக கவசம் அணிவது சமூக இடைவெளி என அனைத்து கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயம். பணப்பட்டுவாடா குறித்து நேற்று முன்தினம் வரை 28-வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பின் பொழுது கோவை மாவட்டத்திற்குத் தேர்தல் சிறப்புப் பார்வையாளராக நியமிக்கப்பட்ட நாகராஜன், மற்றும் பார்வையாளர் கோவிந்த ராவ் ஆகியோர் உடனிருந்தனர்.