வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில், தனியார் மண்டபத்தில் நேற்று அதிமுகவினர் ரகசிய கூட்டம் நடத்தியுள்ளனர்.
கோவை: கோவையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கில் அதிமுகவினரை வரவழைத்து வன்முறையை கட்டவிழ்த்து விட அதிமுகவினர் திட்டமிட்டு இருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று காளப்பட்டி சுகுணா திருமண மண்டபத்தில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்குப் பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கோவையில் நாளை நடக்கவுள்ள வாக்கு எண்ணிக்கையை எதிர்கட்சியினர் சீர் குலைக்க முயற்சி செய்து வருகின்றனர். கோவையில் எதிர்கட்சியினர் வன்முறையை, கலவரத்தை செய்ய தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.
நாளை வாக்கு எண்ணிகையின் போது எந்த விதமான வன்முறை நடந்தாலும் பொறுமையுடன் செயல்பட திமுக கட்சியினருக்கு அறிவுறுத்தி இருக்கின்றோம். மேலும், நாளை வன்முறை நடந்தாலும் வாக்கு எண்ணிக்கையில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாக்குப் பதிவு தினத்தன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்குப் பதிவு மையம் சென்றுள்ளனர். அவர்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.
மேலும், வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில் தனியார் மண்டபத்தில் நேற்று அதிமுகவினர் ரகசிய கூட்டம் நடத்தியுள்ளனர். அக்கூட்டத்தில் செல்போன்கள் கூட்டத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. அதிமுகவினர் மட்டும் தான் உள்ளனரா என கவனித்து கூட்டத்தை நடத்தி இருக்கின்றனர்.
மேலும், அதிமுக கூட்டம் நடந்த மண்டபத்தின் கதவுகளை அடைத்து விட்டு பேசி இருக்கின்றனர். ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அதிமுகவினர் 100 பேர் வர வேண்டும் என பேசி இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.
மேலும், ஆயிரக்கணக்கில் அதிமுகவினரை வரவழைத்து நாளை நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை நாளன்று வன்முறையை கட்டவிழ்த்து விட திட்டமிட்டு இருக்கின்றனர் எனவும் குற்றம்சாட்டினார். சிறு, சிறு பிரச்சனைகள் கூட இல்லாமல் அமைதியாக தேர்தல் நடைபெற்றுள்ளது அதனைப் போலவே, நாளை நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெறும் என தெரிவித்தார்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்கு சாவடிகளுக்குள் எப்படி சென்றார். யார் அனுமதித்தார்கள் என கேள்வி எழுப்பிய நிலையல், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் சென்றது குறித்து திமுக சார்பில் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
பின்னர், இலவச மின் இணைப்பிற்கு ஆதார் கார்டு கட்டாயமா என்ற கேள்விக்கு, தேர்தல் தவிர பிற கேள்விகளுக்கு பின்னர் பதில் அளிப்பதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.