வாக்குச்சாவடி மாறியதால், வாக்களிக்க வந்த பா.ஜ.க மகளிர் அணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஏமாற்றம்.
கோவை: கோவையில் நடைபெற கூடிய தேர்தல் கோவையின் மானப் பிரச்சனையாக மாறியுள்ளதாகவும் முறையாக எந்த பணியையும் தேர்தல் ஆணையம் செய்யவில்லை என்று பா.ஜ.க மகளிர் அணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு தெரிவித்தார்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் வாக்களிப்பதற்காக காமராஜர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிக்கு வந்தார்.
அப்போது, அங்குள்ள வாக்குச்சாவடியில் அவருடைய பெயரும், அவருடைய வாக்காளர் என்னும் இல்லை என்பது தெரியவந்தது. அதிகாரிகளுடன் இது சம்பந்தமாக கோரிக்கை வைத்தார்.
அதனை தொடர்ந்து, மாநில தேர்தல் ஆணையம் கொடுத்துள்ள இணையதளத்தில் பரிசோதித்துப் பார்த்ததில் கோவை காந்திபுரம் ஒன்பதாவது வீதியிலுள்ள கோயம்புத்தூர் மலையாளிகள் சமாஜம் பள்ளியில் அவருக்கு வாக்கு இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து, அங்கு சென்ற வானதி சீனிவாசன் தனது வாக்கினை தனது மகனுடன் செலுத்தினார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில்:-
நடைபெறக்கூடிய தேர்தல் என்பது கோவையின் மானப் பிரச்சனையாக மாறியுள்ளது. நம்முடைய ஜனநாயக கடமை உள்ளாட்சித் தேர்தலில் குறிப்பாக எதற்காக வாக்களிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் நம்முடைய ஜனநாயக கடமையை அத்தனை பேரும் நிறைவேற்ற வேண்டுமென வாக்காளர்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன். அரசியலில் நமக்கு திட்டங்களையும், நமக்காக பணி செய்யக்கூடியவர்களையும் நாம் இந்த தேர்தலில் சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.
கோவை மாவட்டம் தமிழக அரசின் மிக முக்கிய புள்ளியாக மாறியுள்ளது. கடந்த சில தினங்களாக கோவையில் நடைபெறக்கூடிய அத்துமீறல்களும் வாக்காளர்களுக்கு கையில் கொடுக்காமல் வீட்டுக்குள்ளேயே பணம், பரிசுப் பொருட்கள், ஹாட் பாக்ஸ், கொலுசு போன்றவற்றை தூக்கி எறிந்துவிட்டு அதன் பின்பு அவரிடம் வாக்கு கேட்பது போன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.
குறிப்பாக, பொது மக்கள் அதையும் மீறி நல்லவர்களுக்கும் தூய்மையானவர்களுக்கும் வாக்களிப்பது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. சில இடங்களில் வாக்காளர்கள் மிரட்டப்படுகிறார்கள். பிரச்சாரத்திற்கு சென்றவர்கள் மிரட்டப்படுகிறார்கள்.
நேற்று அதிமுக எம்எல்ஏக்கள் இது தொடர்பாக பெரிய போராட்டம் நடத்தியுள்ளனர். இத்தனையும் தாண்டி கோவையின் மான பிரச்சனையாக மாற்றப்பட்டு இருக்கக்கூடிய தேர்தல் என்பது கோவை மக்கள் மிகச் சரியாக முடிவு எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
தேர்தல் நியாயமாக நடக்குமா-வாக்காளர் பட்டியல் வாக்குச்சாவடி போன்ற எதிலும் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தவில்லை.
கடந்த ஐந்து நிமிடங்களுக்கு முன்பு கூட என்னுடைய தொகுதிக்குட்பட்ட ராமநாதபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்யாண மண்டபத்தில் ஹாட்பாக்ஸ் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்டு வாக்கு அளிக்க வைத்துள்ளனர்.
இதுபோன்று எத்தனை அத்துமீறல்களில் ஈடுபடபோகிறார்கள் என்பது தெரியவில்லை. காவல்துறையும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையும் தாண்டி ஜனநாயகம் வெற்றி பெற வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை.
இந்த தேர்தல் நியாயமாக நடக்குமா என்ற மிகப்பெரிய சந்தேகம் எழுந்துள்ளது. கோவை மாநகராட்சியின் வார்டுகள் புதியதாக சேர்க்கப்பட்டும், பிரிக்கப்பட்டும் இருந்தால்கூட தேர்தல் ஆணையம் சரியான ஏற்பாடுகளை செய்யவில்லை. என்னுடைய வாக்குச்சாவடி மையம் இன்னொரு பள்ளியில் காண்பிக்கிறது.
அதன் பின்பு, அந்த வாக்குச்சாவடி மையத்திற்குச் சென்று வாக்களிக்க வேண்டியதாக உள்ளது. எத்தனை மக்கள் பொறுமையாக தேடிச் சென்று தங்களது வாக்கை செலுத்துவார்கள் என்பது சந்தேகமாக உள்ளது. தேர்தல் ஆணையம் அரையும் குறையுமாக சரி செய்யாமலும் நீதிமன்றத்தில் வழக்கு போன்றவை நடந்தும் எந்தவித முன்னேற்பாடுகளையும் செய்யாமல் ஒரு சரியான ஏற்பாடு இல்லாமல், இந்த தேர்தலை நடத்துகிறது.
தேர்தல் ஆணையம் தேர்தலில் எந்தவித கவனம் செலுத்தவில்லை. வாக்குச்சாவடியில் கவனம் செலுத்தவில்லை. வாக்காளர் பட்டியலில் கவனம் செலுத்தவில்லை. தேர்தலை நியாயமாக நடத்தலாம் என்று கவனம் செலுத்தவில்லை என்பது தற்போது தெளிவாக தெரிகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.