கோவையில் பிரபல நிறுவனங்களில் போலியான ஆவணங்களை கொடுத்து பல லட்சம் பணத்தை கையாடல் செய்த யுவராஜ் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை: கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை, நகைக்கடை மற்றும் ஜவுளிக்கடைகளில் போலி ஆவணங்கள் கொடுத்து மோசடி செய்து கடந்த ஒன்றரை வருடங்களாக தலைமறைவாக இருந்த குற்றவாளி சென்னையில் பிடிபட்டான். சென்னை போலீசார் உதவியுடன் பிடிக்கப்பட்ட குற்றவாளியை, கோவை காவல்துறையினர் சென்னையிலிருந்து அழைத்து வந்து கொண்டுள்ளனர்.

கோவை ஆர்.எம்.கே.வி சில்க்ஸ், கோவை லலிதா ஜூவல்லரி, திருச்சி பதஞ்சலி சில்க்ஸ் போன்ற தனியார் நிறுவனத்தில் (நிதி பிரிவில்) போலி ஆவணங்களை கொடுத்து பணியாற்றி, மேற்கண்ட நான்கு நிறுவனங்களிலும் மொத்தம் ரூபாய். 16 லட்சம் வரை மோசடி செய்த யுவராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இங்கு மோசடி செய்து விட்டு, கடந்த 1.1/2 வருடமாக தலைமறைவாக இருந்து வந்த யுவராஜ், சமீபத்தில் கோவை கே.எம்.சி. எச் என்ற தனியார் மருத்துவமனையில், போலி ஆவணங்களை சமர்பித்து, நிதி பிரிவில் பணியில் சேர்ந்து, கடந்த வாரம் ரூபாய் 85,00,000/- (எண்பத்து ஐந்து லட்சம்) பணத்தை லாக்கரில் இருந்து திருடி தலைமறைவானார்.
தொடர் மோசடியில் ஈடுபட்டு வந்த யுவராஜை பிடிக்க கோவை காவல்துறையினர் தீவிரம் காட்டி வந்த நிலையில், குற்றவாளியை பிடிக்க சென்னை மாநகர காவல் துறையின் உதவியை நாடினர்.
இதையடுத்து, சென்னை மாநகர கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் Dr.Tr.கார்த்திகேயன் IPS., அவர்களின் உத்தரவின்படி, தனிப்படை போலீசார் தொடர்ந்து மூன்று நாட்களாக யுவராஜை தேடி வந்தனர்.
இந்த நிலையில், இன்று சென்னையில் யுவராஜ் கைது செய்யப்பட்டு, கோவை மாநகர போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பல்வேறு இடங்களில், பல லட்சம் பணத்தை கையாடல் செய்த யுவராஜ் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.