காரில் கேஸ் சிலிண்டர் இணைக்கப்பட்டிருந்ததால் அதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ பற்றி இருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருப்பூர்: திருப்பூரில் நடு ரோட்டில் வெடித்து தீ பிடித்து எரிந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் தனது அல்டோ காரில் திருப்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். இவர் திருப்பூர் லட்சுமி திருமண மண்டபம் அருகில் வந்தபோது திடீரென காரில் சப்தம் எழுந்துள்ளது.
இதையடுத்து, சந்திரசேகர் அதை பார்க்க முற்பட்டபோது திடீரென கார் தீப்பற்றி எரிந்ததால் அதிர்ச்சியடைந்த சந்திரசேகர் காரில் இருந்து வெளியேறி அருகில் இருந்தவர்கள் உதவியுடன் தீயை அணைக்க முற்பட்டுள்ளார்.
ஆனால், காரில் பொருத்தப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர் பெரும் சப்தத்துடன் வெடித்ததால் அனைவரும் காரை விட்டு ஓடி தப்பித்தனர். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீ பரவி எரிந்து சேதமானது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறையினர் காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வீரபாண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து கார் உரிமையாளர் சந்திரசேகரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தீப்பிடித்து எரிந்த காரில் காருக்கு பொருத்தும் கேஸ் சிலிண்டர் இணைக்கப்பட்டிருந்தது. அதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ பற்றி இருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.