கோவை விமான நிலையத்தில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் முறைகேடாக அதிக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது என்றும் கட்டணம் வசூல் செய்யும் பணியை பெரும்பாலும் மொழி தெரியாத வட மாநிலத்தினர் மேற்கொண்டுள்ளதால் அவர்களிடம் இதுகுறித்து முறையிட முடியாமல் மக்கள் அவதி.
கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் முறைகேடாக அதிக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. கட்டணம் வசூல் செய்யும் பணியை பெரும்பாலும் வட மாநிலத்தினர் மேற்கொண்டுள்ளதால் பயணிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
கோவை சர்வதேச விமான நிலையம் கோவை உட்படச் சுற்றுப்புறங்களைச் சேர்ந்த 7-மாவட்ட மக்களுக்குப் பயனளித்து வருகிறது. சராசரியாகத் தினமும் 36-விமானங்கள் இயக்கப்படும். கொரோனா நோய்த்தொற்று பரவலுக்குப் பின் தற்பொழுது தினசரி இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை 14-ஆக குறைந்துள்ளது.
கோவையிலிருந்து சிங்கப்பூர், ஷார்ஜா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் உள்நாட்டில் சென்னை, டில்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. பயணிகள் மற்றும் அவர்களை வழியனுப்ப வரும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வசதிக்காக 100-கார்கள் பார்க்கிங் செய்யும் அளவுக்கு இடவசதி கொண்ட பிரமாண்ட கார் பார்க்கிங் விமான நிலைய நுழைவாயில் அருகே அமைக்கப்பட்டு உள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட கட்டண வசூல் விபரம்:-
1. பயணிகளை இறக்கி விடவும் ஏற்றி செல்லவும் மூன்று நிமிடங்களுக்குள் வாகனத்தை இயக்கினால் எவ்விதக் கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது.
2. அரை மணி நேரத்துக்குள் பயணியை இறக்கி விட்டு அல்லது ஏற்றிச் சென்றால் 20-ரூபாய் கட்டணம்.
3. அரை மணி நேரத்துக்கு மேல் 60-ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படும்.
ஆனால் பெரும்பாலும் பலரிடம் அரை மணி நேரத்துக்கு முன்பாக வாகனங்களை இயக்கினால் கூட 60-ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
வட மாநிலத்தினர் ஆதிக்கம்!
தவிர பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் இடத்தில் பெரும்பாலும் வடமாநில தொழிலாளிகள் பணியில் உள்ளதால், அவர்களுடன் இந்தி தெரியாத பயணிகள் பெரும் சிரமப்பட்டு விளக்கம் பெறவும், முறைகேடாக அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து மேற்கொண்டு அவர்களிடம் பேச முடியாமலும் தவித்து வருகின்றனர்.
• கண்காணிப்பு அதிகரிப்பு: புகார் பெட்டி வைக்க உத்தரவு!
கோவை சர்வதேச விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் கூறியதாவது:-
விமான நிலைய வளாகத்தில் பார்க்கிங் பகுதியில் முறைகேடாகக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக சில புகார்கள் வந்துள்ளன. உடனடியாக கண்காணிப்பு பணியை அதிகரிக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
தவிர புகார் பெட்டி வைக்கவும், முறைகேடாக பார்க்கிங் கட்டணம் வசூலிப்பது தொடர்பாகப் புகார் தெரிவிக்க மொபைல் போன் எண்கள் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றுக்கும் மேல் பார்க்கிங் காண்ட்ராக்டரை அழைத்து இதுபோன்று எந்த புகாரும் வராத வகையில் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளேன்.
பயணிகள் நலனே மிக முக்கியம். அதற்கு எந்தவித சமரசமும் செய்து கொள்ள முடியாது. எனவே அரை மணி நேரத்துக்குள் வாகனங்களை இயக்குபவர்கள் 20-ரூபாய் கட்டணம் மட்டுமே செலுத்தினால் போதுமானது. அதற்குமேல் வாகனங்களை நிறுத்தி இயக்கும் பயணிகள் அல்லது அவர்களது உறவினர்கள் மட்டுமே 60-ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
பயணிகள் ஏதேனும் இது போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது உடனடியாக விமான நிலைய வளாகத்தில் உள்ள அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.