மக்கள் நீதி மய்யம் பெரிய வியாபாரி இல்லை எனவும், அதனால் பெரிய அளவில் பொய் சொல்ல மாட்டோம் எனவும் கூறிய கமல்ஹாசன், தங்களால் செய்ய முடிந்த வாக்குறுதிகளைக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
கோவை: கோவை மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், பிற கட்சிகளால் செய்ய முடியாததை மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் செய்வார்கள், பிற வேட்பாளர்கள் செய்வதைச் செய்ய மாட்டார்கள். சூயஸ் திட்டத்தில் சிறுவாணி தண்ணீரை விற்க கூடாது என சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் கூறியவர்கள் தற்போது அத்திட்டத்தை முடுக்கிவிட்டுள்ளனர்.
இவர்களது ஊழல் ஆட்சியில் சந்தோசமாக வாழ்வது கொசுக்கள் மட்டும் தான், மக்கள் அல்ல. தனது வேட்பாளர்கள் பலர் கடமையைச் செய்யவில்லையென்றால் பதவியை விட்டு விலகுவதாக எழுதிக் கொடுத்து வாக்கு சேகரித்து வருகிறோம்.
என்ன முடியுமோ அதைச் சொல்லிச் செய்து காட்டுவோம் அதற்கான உதவியை மக்கள் செய்ய வேண்டும். தங்களது வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் மாதம்தோறும் ரிப்போர்ட் கார்டு கொடுப்பார்கள்.
அதை மற்ற வேட்பாளர்கள் செய்வார்களா எனவும் அவர் கேள்வி எழுப்பினார். மக்கள் நீதி மய்யம் பெரிய வியாபாரி இல்லை எனவும், அதனால் பெரிய அளவில் பொய் சொல்ல மாட்டோம் எனவும் கூறிய கமல்ஹாசன், தங்களால் செய்ய முடிந்த வாக்குறுதிகளைக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.