இரண்டு வருடங்களுக்குப் பிறகு பள்ளிகள் தொடங்கப்பட்டதால் ஒரு சில குழந்தைகள் அழுதபடி இருந்தனர்.
கோவை: கோவை மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நர்சரி பிரைமரி பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.
தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை கடந்த ஆண்டு கடுமையாகத் தாக்கியது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.
இதையடுத்து, கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. இதே போல், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால், நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் திறக்கப்படவில்லை.
இதற்கிடையே, கொரோனா மூன்றாவது அலை தாக்கம் குறைந்ததற்கு பிறகு, கடந்த 1ம் தேதி முதல், 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று நர்சரி பிரைமரி பள்ளிகள் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டன. இதனையடுத்து, குழந்தைகளை வாசலிலேயே உற்சாகத்தோடு வரவேற்ற ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் அழைத்துச்சென்றனர்.
இரண்டு வருடங்களுக்கு பிறகு பள்ளிகள் தொடங்கப்பட்டதால் ஒரு சில குழந்தைகள் அழுதபடி இருந்தனர்.
அப்போது, குழந்தைகளை ஆடிப்பாடி உற்சாகப்படுத்தி வருகின்றனர்.