மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை அமைப்பினர் வலியுறுத்தினர்.
திருப்பூர்: திருப்பூரில் தலை துண்டிக்கப்பட்டு இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் செரங்காடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு சதீஷ் என்னும் இளைஞர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் காவல்துறையினர் 4 பேரை கைது செய்துள்ள சூழ்நிலையில் உயிரிழந்த இளைஞர் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் வழக்கை எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அதற்கான நிவாரணத் தொகையை குடும்பத்திற்கு பெற்றுத் தரவேண்டும் எனவும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும், குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும், திருப்பூர் மாவட்டத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறக் கூடிய சூழ்நிலையில் பொதுமக்கள் அச்சத்தைப் போக்கும் வகையில் காவல்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை அமைப்பினர் திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.