கோவை காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியார் படிப்பகத்தில் காதலர் தின விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
கோவை: கோவையில் காதலர் தினத்தை முன்னிட்டு, சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடிகள் தந்தை பெரியார் படிப்பகத்தில் கேக் வெட்டி கொண்டாடினர்.
சர்வதேச காதலர் தின விழா உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியார் படிப்பகத்தில் காதலர் தின விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
அப்போது, வடவெள்ளியை சேர்ந்த ஜோசப், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த செளமியா என்ற காதல் ஜோடிக்கு தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் திருமணம் செய்து வைத்தார்.
பின்னர் அவர் இதுகுறித்து கூறுகையில்,
காதல் திருமணத்திற்கு சில மதவாத அமைப்புகள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. காதல் திருமணம் மூலம் மட்டுமே மதம், சாதிகளை ஒழிக்க முடியும். காதல் திருமணம் செய்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க காவல்துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார்.
கொரோனா கால கட்டத்தில் 400 காதல் திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகவும், இதுவரை 6 ஆயிரம் திருமணம் நடத்தி வைத்திருப்பதாகவும், திருமணம் செய்தவர்கள் பெரும்பாலும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களின் வாரிசுகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இன்று காதலர் தினத்தை முன்னிட்டு இரண்டு காதல் ஜோடிகள் சுயமரியாதை திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
காதலுக்கும், காதலர்களுக்கும் சாதி, மதம் கிடையாது. எனவே அதை வைத்து காதலர்களை பிரிக்கக்கூடாது. காதலர் தினத்தில் காதலனை கைப்பிடித்ததால் மகிழ்ச்சி அடைவதாக புதுமண தம்பதிகள் தெரிவித்தனர்.