ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் புலி தென்ப்பட்டால், அதன் வயது, பாலினம் ஆகியவை முடிவு செய்த பின்பு மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் - வனத்துறையினர்
நீலகிரி: கடந்த ஒரு வாரமாக உதகை அருகே உள்ள கடநாடு கிராம குடியிருப்பு மற்றும் விவசாய நிலத்தில் புலி நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி அளித்த புகாரின் பேரில், அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட வன அதிகாரிகள், நகு புலியின் நடமாட்டத்தை உறுதி செய்தனர்.
புலியின் நடமாட்டம் காரணமாக, வெளியே வர மிகுந்த அச்சம் அடைந்துள்ள கிராம மக்கள், விவசாய பணிகளை மேற்கொள்ளாமல், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல முடியாமல் இருப்பதால், அவர்கள் வாழ்வாதாரம்பெரிதும் பாதிக்கப்படுவதாக வருத்தம் தெரிவித்தனர்.
இதையடுத்து, இன்று மாவட்ட வன அலுவலர் சச்சின் துக்காராம் தலைமையில் வனத்துறை அதிகாரிகள் ஊழியர்கள், புலி நடமாடும் இடத்தில் தானியங்கி கேமரா பொருத்தும் பணியை மேற்கொண்டனர். மேலும், புலியின் கால் தடங்கள் பதிந்து இருக்கும் இடங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதையடுத்து மாவட்ட வன அலுவலர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கிராம மக்கள் புலி நடமாட்டத்தை குறித்து கொடுத்த தகவலையடுத்து, புலி நடமாட்டம் உள்ள பகுதியில் கேமராக்களை பொருத்தி உள்ளதாகவும், கேமராவில் புலி தென்பட்டவுடன் அதன் வயது மற்றும் அதனுடைய நடவடிக்கைகள் குறித்துஉறுதி செய்யப்பட்ட பின்பு அதை பிடிப்பதற்கான நடவடிக்கைகள்
எடுக்கப்படும் என்றார்.
மேலும்,புலி நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம், எனவும் மாவட்ட வன அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.