அன்னூரை அடுத்துள்ள கோவில்பாளையம் பகுதியில் தனி வட்டாட்சியர், மேரி வினிதா தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த போது காரில் கடத்தி வரப்பட்ட 11 அட்டைப்பெட்டிகள் நிறைய மதுபாட்டில்கள் பறிமுதல்.
கோவை :கோவில்பாளையம் அருகே தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனையொட்டி, வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் மற்றும் பரிசுப்பொருட்களை வழங்குவதை தடுக்கும் பொருட்டு பறக்கும் படைகள் மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன் ஒருபகுதியாக, கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள கோவில்பாளையம் பகுதியில் தனி வட்டாட்சியர், மேரி வினிதா தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்த போது, காரில் 11 அட்டைப்பெட்டிகள் நிறைய மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை எடுத்துச்செல்ல உரிய ஆவணங்கள் இல்லை என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து, அந்த 11 அட்டை பெட்டியில் உள்ள மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும், மதுபாட்டில்களை கடத்தி வந்த புதுக்கோட்டை மாவட்டம் பத்திரிக்குடி மேலத்தெருவை சேர்ந்தபிரபாகரன் (வயது 25) என்பவரை பிடித்து கோவை கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம், கோவில்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.